ராமநாதபுரம், மே 15: ராமநாதபுரம் வைசியாள் தெருவில் உள்ள வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், வாசவி ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது. கடந்த 4ம் தேதி அம்மனுக்கு காப்பு கட்டும் வைபவம் நடந்தது. தொடர்ந்து பால்குடம் எடுக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டுதல் நடைபெற்றது. நேற்று காலை 7 மணிக்கு முகவை பெரிய கோயிலிருந்து பால்குடம் எடுத்து நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். காலையில் மகாகணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. பகல் 11 மணியளவில் மகா தீபாராதனை பூஜை பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாலையில் விசேஷ அலங்காரத்துடன் அம்மன் வீதி உலா நடைபெற்றது.