×

மாவட்டம் அசத்தல் நாட்டியம் திருத்தளிநாதர் கோயிலில் திருக்கல்யாண வைபவம்

திருப்புத்தூர், மே 14: திருப்புத்தூர் அருள்மிகு சிவகாமி உடனாய திருத்தளிநாதர் சுவாமி கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழாவை முன்னிட்டு நேற்று சுவாமிக்கும், அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் திருத்தளிநாதர் சுவாமி கோயிலில் வைகாசிப் பெருவிழா பத்து நாட்கள் நடைபெறும். இதை முன்னிட்டு கடந்த மே.9ம் தேதி கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கொடியேற்றப்பட்டு முதல் நாள் விழா துவங்கியது.

இரவு சுவாமி திருவீதி உலா நடந்தது. 2ம் திருநாள் முதல் 8ம் திருநாள் வரை சுவாமி பூதம், அன்னம், ரிஷபம், சிம்மம், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் வெள்ளி கேடகத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடந்து வருகிறது. 5ம் திருநாளான நேற்று காலை 8.30 மணியளவில் அம்மன் தவத்திற்கு எழுந்தருளினார். பின்னர் சோழிய வெள்ளாளர் உறவின் முறையினர் சார்பில் தென்மாபட்டு வேலாயுதசாமி மடத்திலிருந்து கல்யாண சீர்வரிசை எடுத்து வரப்பட்டு திருநாள் மண்டபத்தில் வைக்கப்பட்டது.

பின்னர் சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க 10.20 மணியளவில் திருத்தளிநாதர் சுவாமிக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் திருப்பூட்டு வைபவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பெண்களுக்கு மாங்கல்ய கயிறு, மஞ்சள், குங்குமம், வளையல்கள் வழங்கப்பட்டது. இரவு யானை வாகனத்தில் பூப்பல்லக்கில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா நடந்தது.

Tags : ceremony ,Thiruthilinathar Temple ,
× RELATED மரக்கன்றுகள் நடும் விழா