பரமக்குடி, ஏப்.25: நயினார்கோவில் பகுதியில் கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் கோடை உழவு பணிகளை மேற்கொள்ளலாம். இதற்கு மானியம் வழங்கப்படுவதாக வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார். பரமக்குடி மற்றும் சுற்றவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் பரவப்பயிர்கள் சாகுபடிக்கு பின் நிலங்கள் தன்மை மாறி கட்டியாகி விடும். எனவே மழைநீர் வீணாகாமல் கோடை உழவு பணிகளை மேற்கொள்ளவேண்டும். மண்ணில் உள்ள பூச்சி முட்டைகள் அழிக்கப்படுவதால் பூச்சி தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாக்க முடியும். நீடித்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் இந்த வருடம் கோடை உழவுபணி செய்வதற்கு ஏக்கருக்கு ரூ.1,250 மானியம் வழங்கப்படுகிறது. இந்த வருடம் சிறுவயல் கிராமம் இந்த திட்டத்தில் தொகுப்பாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசனூர், அ.பனையூர், தேத்தாங்கல், குளத்தூர் மற்றும் சிறுவயல் ஊராட்சி கிராமங்கள் அனைத்தும் இந்த திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும் என நயினார்கோவில் வேளாண்மை உதவி இயக்குனர் பானுபிரகாஷ் தெரிவித்துள்ளார்.