×

மீன்வளத் துறையிடம் புகார் பிரசாரம் முடிந்த நிலையில் பணப்பட்டுவாடா செய்தால் உடனே புகார் தெரிவிக்கலாம்

ராமநாதபுரம், ஏப்.17: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 1,367 வாக்குச்சாவடிகளிலும் மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கான மூன்று சக்கர நாற்காலி மற்றும் சேவையாளர் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்தார். பாராளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்ப உள்ள 158 மூன்று சக்கர நாற்காலிகளை பார்வையிட்ட பின் கலெக்டர் கூறுகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் 11,590 மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பது தெரிய வருகிறது. மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்காகவும் மாவட்ட அளவில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் உள்ள 1,367 வாக்குச்சாவடிகளில் தலா ஒரு மூன்று சக்கர நாற்காலி என ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சக்கர நாற்காலியை செயல்படுத்த சேவையாளர் ஒருவர் என அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நியமிக்கப்பட்டுள்ளார்.

வாக்குப்பதிவுக்கான அனைத்து மின்னணு இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் பணியில் டுபடுவோர்களையும் இன்று சம்பந்தப்பட்ட  வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்த நிலையில் விதி மீறுவோரை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குகளுக்கு பணம் பட்டுவாடா செய்வோர் குறித்து 1950 என்ற தொலைபேசி எண்ணில் 24 மணி நேரமும் தகவல் மையத்துக்கு தெரிவிக்கலாம். பணம் விநியோகம் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்டத்தில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறும் வகையில் 792 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்புக் காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பிரசாரம் நிறைவடைந்த நிலையில் வெளியூரைச் சேர்ந்த வாக்காளர்கள் ராமநாதபுரம் தொகுதியில் தங்கி பிரசாரத்தில் ஈடுபடவோ, தேர்தல் பணிகளில் ஈடுபடவோ கூடாது. அப்படி விதிமீறி செயல்படுவோரைக் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

Tags : Fisheries Department ,expiration ,campaign ,
× RELATED கூடலூரில் உள்ள மீன்கடைகளில் கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்..!!