×

ஆர்.எஸ்.மங்கலம் அருகே புதிதாக கட்டப்பட்ட மீன் இறங்குதளத்தில் மின் இணைப்பு இல்லாமல் மீனவர்கள் அவதி

ஆர்.எஸ்.மங்கலம், ஏப். 5: ஆர்.எஸ். மங்கலம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் மீன்வளத் துறை சார்பாக புதிதாக கட்டப்பட்டுள்ள மீன் இறங்குதளத்தில் மின் இணைப்பு இல்லாமல் இரவு நேரங்களில் மீனவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே உடனடியாக மின் இணைப்பு கொடுக்க வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவிலுள்ள மோர்ப்பண்ணை கிராமம் முற்றிலும் மீனவர்கள் மட்டுமே வசிக்கும் மீனவ கிராமம் ஆகும். இங்கு சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்கரை ஓரமாக மீன்வளத் துறையின் சார்பாக நபார்டு திட்டத்தின் கீழ் பலலட்சம் ரூபாய் செலவில் மீன் இறங்கு தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இறங்கு தளத்தில் மீனவர்கள் கடலுக்குச் சென்று திரும்பி தாங்கள் பிடித்த மீன்கள் மற்றும் வலைகளை பிரிக்கின்றனர். ஆனால் இரவு நேரங்களில் மின் இணைப்பு இல்லாமல் மின் விளக்குகள் எரிவதில்லை. இதனால் கடும் இருட்டில் மீனவர்கள் எந்த பணியும் செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர். பல லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டு கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த கட்டிடத்தில் வயரிங் வேலைகளெல்லாம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் மின் இணைப்பு மட்டும் கொடுக்காமல் வருட கணக்கில் காட்சி பொருளாக உள்ளது. இதனால் மின் வெளிச்சமின்றி மீனவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக மின் இணைப்பு கொடுத்து மீனவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : Fishermen ,fish landfill ,RS Mangal ,
× RELATED திருச்சூர் அருகே கப்பல் மீது படகு மோதி 2 மீனவர்கள் பலி