திருவாடானை. மார்ச் 21: ராமநாதபுரம் மாவட்டத்தில் பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தில் உரிய இழப்பீடு கிடைக்காததால். விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த பிரச்னை மக்களவை தேர்தலில் எதிரொலிக்கும் என்ற கலக்கத்தில் அதிமுக கூட்டணியினர் உள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக தொடர் வறட்சியை சந்தித்து வருகிறது ராமநாதபுரம் மாவட்டம். இந்த மாவட்டத்தில் ஒரு போகம் மட்டுமே நெல் விவசாயம் செய்யப்படுகிறது. கடந்த 2017- 2018ம் ஆண்டில் நெல் விவசாயம் செய்திருந்தனர். பருவ மழை பொய்த்து போனதால் நெல் பயிர்கள் அனைத்தும் கருகி விட்ட நிலையில், விவசாயிகள் நம்பியிருந்தது பிரதம மந்திரி பயிர்காப்பீடு திட்டத்தை மட்டுமே. இந்தத் திட்டத்தில் 1 லட்சத்து 52 ஆயிரம் விவசாயிகள் காப்பீடு செய்து இருந்தனர். கடன்பட்டு செய்திருந்த விவசாயம் கைகொடுக்காத நிலையில் எப்படியும் காப்பீடு கை கொடுத்து விடும் என்று நம்பியிருந்த விவசாயிகளுக்கு இதுவரை இழப்பீடு தொகை கிடைக்கவில்லை.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகை இந்த ஆண்டு மார்ச் வரை வழங்கப்படவில்லை. விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் பல்வேறு போராட்டங்களையும் நடத்தி பார்த்தும் கூட இதுவரை இழப்பீடு வந்து சேரவில்லை. இதனால் விவசாயிகள் மாவட்ட அளவில் பெரிய அளவிலான போராட்டத்தை சின்ன கீரமங்கலத்தில் நடத்தினர். அதன் பிறகு சில வருவாய் கிராமங்களுக்கு மட்டும் ஏக்கருக்கு ரூ.5,600 வீதம் வழங்கப்பட்டுள்ளது. நூறு சதவீதம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வெறும் 25 சதவீதம் மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அதுவும் சில வருவாய் கிராமங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இன்னும் மற்ற கிராமங்களுக்கு வழங்கப்படாத நிலையில், பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது.
இந்நிலையில் கடனில் தத்தளிக்கும் விவசாயிகளுக்கு பாராளுமன்ற தேர்தல் எட்டிக்காயாக கசக்கிறது. இதனால் அதிமுக தரப்பில் பாராளுமன்ற தேர்தலில் எப்படி விவசாயிகளிடம் சென்று வாக்கு கேட்பது என தயங்கி இருந்த நிலையில், அதிமுக கூட்டணி கட்சியான பாஜகவிற்கு தொகுதியை தள்ளி விட்டது. இதனால் கூட்டணி கட்சிக்கு தான் ஒதுக்கப்பட்டது என்றாலும், பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தில் இழப்பீடு வழங்காதது, மேலும் மாவட்டத்தில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதுபோன்ற காரணங்களால் அதிமுக கூட்டணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என கூட்டணி தரப்பினர் அச்சத்தில் உள்ளனர். எனவே இழப்பீடு வழங்காமல் உள்ள மற்ற ஊர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டுமென கட்சியினர் ஆளும் தரப்புக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.