ராமநாதபுரம், பிப்.28: ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு துறை சார்பில் அரசு ஊழியர்களுக்கான மாவட்ட அளவிலான தடகள மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் நாளை துவங்குகிறது. ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சேதுபதி விளையாட்டு அரங்கில் அரசு பணியாளர்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் ஆண்களுக்கான 100, 200, 800, 1500 நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 4X100மீ தொடர் ஓட்டம். கால்பந்து போட்டிகளும், பெண்களுக்கு 100, 200, 400, 800 நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 4X100மீ தொடர் ஓட்டம், குழு விளையாட்டு போட்டிகளில் இருபாலருக்கும் இறகுப் பந்து, கூடைப்பந்து, டென்னிஸ், கபடி, டேபிள் டென்னிஸ், வாலிபால் மற்றும் கால்பந்து போட்டிகள் நடைபெற உள்ளது.
இப்போட்டியில் கலந்து கொள்ள வயது வரம்பு கிடையாது. போட்டியில் கலந்து கொள்ளும் அரசு பணியாளர்கள் ஒரு நாள் தற்காலிக விடுப்பு வழங்க ஆணையிட்டுள்ளது. போட்டியில் கலந்து கொள்ளும் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் சான்று போட்டிகள் நடைபெறும் நாளில் சமர்ப்பிக்கவேண்டும். முதல் மூன்று இடங்களைப் பெறும் வீரர்-வீராங்கனைகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் இடத்தில் வெற்றி பெறும் வீரர்களுக்கு மற்றும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கும் போது சீருடைகள் வழங்கப்படும். போட்டியில் கலந்து கொள்ள தகுதிகள்: தமிழ்நாடு மாநில அரசுத்துறை சார்ந்த அலுவலர் மற்றும் ஊழியராக இருக்க வேண்டும். சீருடை பணியாளர்கள் காவல்துறை, ராணுவம், தீயணைப்புத் துறை, மற்றும் வனத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு அனுமதி இல்லை.
இத்துறை சார்ந்த அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொள்ளலாம். அரசுத் துறையில் புதிதாக பணியில் சேர்ந்து ஆறு மாதங்கள் நிறைவடையாதவர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை. கல்வி நிறுவனங்கள் மற்றும் உடல் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்கலாம். விளையாட்டு துறை அலுவலர்கள் மற்றும் பயிற்றுநர்கள் கலந்து கொள்ளலாம். தற்காலிக பணியாளர்கள். ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்கள் இப்போட்டியில் கலந்து கொள்ள அனுமதி இல்லை என மாவட்ட விளையாடடுத்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.