சேலம், பிப். 27: ஏற்காட்டில் நடந்த விபத்தில் பஸ் கவிழ்ந்து பயணி ஒருவர் பலியான வழக்கில் டிரைவருக்கு நூதன தண்டனை விதித்து சேலம் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சேலம் உடையாப்பட்டி பக்கமுள்ள அதிகாரிபட்டியை சேர்ந்தவர் பெருமாள்(48). இவர் ஏற்காட்டில் இருந்து சேலத்திற்கு வரும் தனியார் பஸ் ஒன்றின் டிரைவராக பணியாற்றி வந்தார். இந்த பஸ் கடந்த 2009ம்ஆண்டு பயணிகளை ஏற்றிக்கொண்டு சேலம் நோக்கி வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒரு பயணி பலியானார். 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர். இந்த வழக்கு சேலம் 5வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்ைக விசாரித்த நீதித்துறை நடுவர் கணேசன், டிரைவர் பெருமாளுக்கு நூதன தண்டனையை விதித்தார். அதாவது ஓராண்டிற்கு தினமும் அஸ்தம்பட்டியில் உள்ள நன்னடத்தை அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டார்.