தொண்டி, பிப்.27: தொண்டி அருகே நம்புதாளை அரசு உயர்நிலைப் பள்ளி மாணவிகள் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் முதலிடம் பிடித்துள்ளனர். ராமநாதபுரம் கல்வி மாவட்ட அளவில் பள்ளிகளுக்கான கல்வி திருவிழா புனித ஆந்திரோதையா பள்ளியில் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்தும் மாணவர்கள் கலந்துகொண்டனர். தமிழ் கையெழுத்து போட்டி, ஆங்கில கையெழுத்து போட்டி, தேசபக்தி பாடல்கள் பாடும் போட்டி, சிற்பம் செதுக்கும் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
இதில் பாடல் போட்டியில் நம்புதாளை அரசு உயர் நிலைப்பள்ளி 6ம் வகுப்பு மாணவி ஹரிதா மற்றும் 7ம் வகுப்பு மாணவி ரில்வானா ஆகியோர் மாவட்ட அளவில் முதல் பரிசை பெற்றனர். இருவரையும் பாராட்டி பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் ஆத்மநாதன் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் செய்யது யூசுப் முன்னிலை வகித்தார். தமிழ் ஆசிரியை வளர்மதி, உடற்கல்வி ஆசிரியர் வின்சென்ட் சேவியர் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.