திருவாடானை, ஜன.25: திருவாடானை பகுதியில் உள்ள வேப்ப மரங்களில் நோய் தாக்கி ஆயிரக்கணக்கான மரங்கள் பட்டுப்போனது. திருவாடானை தாலுகாவில் அதிகளவில் விளைநிலங்களும் கண்மாய் குளங்களும் உள்ளன. விவசாயத்திற்கு அடுத்தபடியாக இப்பகுதியில் புளி,வேம்பு போன்ற மரங்களிலிருந்து விவசாயிகள் வருமானம் பார்த்து வருகின்றனர். திருவாடானை பகுதியை பொருத்தமட்டில் அனைத்து இடங்களிலும் வேப்பமரங்கள் வளர்க்கப்படுகிறது. தற்போது இப்பகுதியில் உள்ள வேப்ப மரங்களில் வினோதமான நோய் தாக்கி மரங்கள் அனைத்தும் பட்டுப்போய் காட்சியளிக்கிறது.
இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், சித்த மருத்துவத்தில் வேப்பமரம் நோய் நீக்கியாகவும், கிருமிகளை அழித்து ஒழிக்கும் அருமருந்தாக உள்ளது. ஆனால் அந்த மரத்திற்கு இதுவரை இல்லாத அளவில் நோய் தாக்குதல் ஏற்பட்டு மரத்திலுள்ள இலைகள் மற்றும் கிளைகள் அனைத்தும் கருகி பட்ட மரமாக மாறிக்கொண்டிருக்கிறது. எனவே தோட்டக்கலை துறையின் மூலம் இந்த நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.