கீழக்கரை, ஜன.11: கீழக்கரை உப மின்நிலையத்தில் பொதுமக்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நுகர்வோர் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கீழக்கரை உப மின்நிலையத்தில் உள்ள குறைபாடுகளை நீக்க வேண்டி கடந்த 6 மாதங்களாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர், ஆகவே கலெக்டர் இந்த விசயத்தில் உடன் ஆய்வு செய்து குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கீழக்கரை நுகர்வோர் நலச்சங்க செயலாளர் செய்யது இபுராகிம் கூறுகையில், 3 மாதத்திற்கு ஒருமுறை ராமநாதபுரம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் தலைமையில் மின் நுகர்வோர் குறைத்தீர்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கடந்த இரண்டு கூட்டத்திலும் நுகர்வோர் நலச் சங்கம் சார்பில் இரண்டு மனுக்கள் அளித்துள்ளோம். அந்த மனுவில், கீழக்கரை துணை உப மின்நிலையத்தில் புகார்களை பொதுமக்கள் எழுதி வைப்பதற்கு நோட்புக் வைப்பதோடு, குடிநீர் வசதி செய்ய வேண்டும். கடந்த இரண்டு வருடத்திற்கு முன் பழைய மின்கம்பிகள் மாற்றப்பட்டது. அந்த சமயத்தில் கீழக்கரை வடக்குத் தெரு, மற்றும் சின்னகடைத் தெரு, மேலத்தெரு ஆகிய தெருக்களில் சில இடங்களில் பழைய கம்பிகளை மாற்றாமல் உள்ளதால், அடிக்கடி உயரழுத்த மின் விநியோகத்தால் பல மின்சாதனங்கள் பழுதாகி விடுகிறது அதை மாற்ற வேண்டும்.
புதிய மின் இணைப்பு கோரும் நுகர்வோருக்கு உடன் இணைப்பு கொடுக்கவும், கீழக்கரை உபமின்நிலையத்தில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளது. இதில் ஏற்படும் பழுதுகளை நீக்குவதற்கு குறைந்தது 7 வயர்மேன்கள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 2 பேர்கள் மட்டுமே உள்ளனர். இதனால் பல இடங்களில் பழுது நீக்க முடியாமல் பொதுமக்கள் கடும் சிரமப்படுகின்றனர். ஆகவே உடன் கூடுதல் பணியாளர்களை நியமிக்கவும், மேலும் பொதுமக்கள் மின்சம்மந்தப்பட்ட புகார்களை தெரிவிக்க (மின் நிலையத்தில்) லேண்ட் லைன் வசதி அமைக்க வேண்டும். நகரில் உள்ள பல இடங்களில் உள்ள மின்கம்பங்கள் மிகவும் மோசமடைந்து முறிந்து விழும் நிலையில் உள்ளது. அதை உடன் மாற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனுவாக அளித்துள்ளோம். ஆனால் மனு அளித்து 6 மாதங்கள் கடந்தும் இந்த கோரிக்கைகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே கலெக்டர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.திருவாடானையில்