ராமநாதபுரம், டிச.25: ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்தைச் சேர்ந்த பெரியபட்டினம் ஊராட்சிக்குட்பட்ட குருத்தமண்குண்டு கிராமத்திற்கு பொதுப்பாதை கேட்டு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் தலைமையில் கிராம மக்கள் கலெக்டர் வீரராகவராவிடம் மனு அளித்தனர். ராமநாதபுரம் திருப்புல்லாணி ஒன்றியம் பெரியபட்டினம் ஊராட்சியில் உள்ள குருத்தமண்குண்டு கிராமத்தில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மிகவும் பிற்படுத்தப்பட்ட முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் நிலையில், பெரியபட்டினம் கடற்கரையில் மீன்பிடி தொழில் செய்து பிழைத்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் அன்றாட தேவைகளுக்கு பொருட்கள் வாங்குவதற்கும், அருகில் உள்ள தொடக்கப்பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் செல்லக்கூடிய பாதை தனியார் இடமாக உள்ளது. பள்ளமான இடமாக உள்ளதால் மழை நேரங்களில் 5 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் வெளியில் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். இந்நிலையில் அப்பகுதி மக்களின் நலன்கருதி தனியார் வசம் உள்ள இடத்தை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலமாகவோ அல்லது மாவட்ட ஆட்சியர் பொது நிதியிலிருந்து பாதைக்கு தேவையான இடத்தை அரசு வாங்கி பொதுமக்களுக்கு பொதுப் பாதையாக மாற்றித்தர வேண்டும் என கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.