பரமக்குடி, டிச.20: பரமக்குடி இடைதேர்தல் அறிவிக்கும் நிலை உள்ளதால், தொகுதியில் வாக்குச்சாவடி முகவர் நியமனம் குறித்து அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமையில் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.தமிழகத்தில் திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளில் எம்.எல்.ஏ.கள் இறந்ததால், எம்.எல்ஏ. பதவி பணியிடம் காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதைபோல் பரமக்குடி, மானாமதுரை உள்ளிட்ட 18 தொகுதி எம்.எல்.ஏ.கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் கூடிய விரைவில் 20 தொகுதிகளுக்கும் இடைதேர்தல் நடத்துவதற்கு வாய்ப்பு அதிகரித்துள்ளதால், திமுக, அதிமுக கட்சியில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நேற்று பரமக்குடி தொகுதி அதிமுக பொறுப்பாளர் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், பரமக்குடி நகர் பகுதியில் உள்ள 36 வார்டுகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி முகவர்கள் நியமனம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தொகுதி பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர் முனியசாமி, மாநில மகளிரணி இணைச்செயலாளர் கீர்த்திகா முனியசாமி ஆகியோர் ஏற்பாட்டில் வார்டு வாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளவர்களை, அழைத்து கட்சி பணியாற்றுவது, வாக்காளர்களிடம் அரசின் திட்டங்களை கொண்டு செல்வது உள்ளிட்ட கருத்துகள் தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சுந்தரராஜ், ஒன்றிய செயலாளர்கள் நாகநாதன், முத்தையா, நகர் செயலாளர் கணேசன், நகர் அம்மா பேரவை வடமலையான் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.