×

ஆர்.எஸ்.மங்கலம் அருகே மாணவர்களை பயமுறுத்தும் நாய்கள்

ஆர்.எஸ்.மங்கலம், நவ.1: ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆனந்தூரில் தெரு நாய்களால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் நடமாடும் நிலை உள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆனந்தூர் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் திரிவதால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளும் மற்றும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். நாய்கள் பள்ளி செல்லும் மாணவர்களின் புத்தக பைகளை இழுத்தும், சீருடைகளை பிய்த்து விடுகின்றது. இதனால் பிள்ளைகள் நாய்களிடமிருந்து தப்பித்தால் போதும் என ஓடும் நிலை உள்ளது. இதனால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிய பெற்றோர்கள் நாய்களிடம் மாட்டிக் கொண்டு கடிவாங்கி வந்து விடுவார்களோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

சில பெற்றோர்கள் வேலையை விட்டு தங்களின் பிள்ளைகளை பள்ளிக்கு கொண்டு போய் விடுவதும், கூட்டி வருவதுமாக உள்ளது. இது சம்மந்தமாக ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், இரவு, பகலாக எங்கள் ஊரில் யாரும் நாய் பயம் இல்லாமல் நடமாட முடியவில்லை. ஆகையால் உயிர் சேதம், பொருள் சேதம் போன்ற விபரீதம் ஏதும் நடைபெறும் முன்பு இந்த நாய்களை ஒழித்து பொதுமக்கள் அச்சமின்றி தெருக்களில் நடக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என்றார்.

Tags : RS Mangal ,
× RELATED ஆர்.எஸ்.மங்கலம் அருகே நாளை மக்கள் தொடர்பு முகாம்