×

ஆம்னிபஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வந்தது

திருச்சி, அக்.26:  திருச்சியில் ஆம்னிபஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வந்தது.தமிழ்நாட்டின் மையப்பகுதியாக விளங்கும் திருச்சி மாநகரம் போக்குவரத்து மிகுந்த பகுதியாகும். திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இரவு, பகல் எந்நேரமும் பல்வேறு ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய பேருந்து நிலையத்தை சுற்றிலும் ஆம்னிபஸ்களின் ஆக்கிரமிப்பு அதிகளவில் இருந்து வந்தது. இதற்கு காரணம் ஆம்னி பஸ்களுக்கென்று தனி பேருந்து நிறுத்தும் இல்லாததே. இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் மத்திய பஸ்நிலையம், ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு இடைப்பட்ட பழைய திருவள்ளுவர் பஸ்நிலையம் அருகில் ரயில்வேக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் ஆம்னி பஸ்களை இயக்கும் இடமாக மாற்றப்பட்டது. இந்த ஆம்னி பஸ்நிலையம் நேற்றுமுன்தினம் (24ம் தேதி) முதல் பயன்பாட்டுக்கு வந்தது. நேற்றுமுன்தினம் காலை முதல் ஆம்னி பஸ்கள் இங்கிருந்து வெளியூர்களுக்கு புறப்பட்டு சென்றன. புதிய ஆம்னி பஸ்நிலையத்தில் பயணிகளுக்கான டிக்கெட்டை தெற்கு ரயில்வே நிலத்துக்கான ஒப்பந்ததாரர் ராயல் டி.தேவகுமார் வழங்க அதை திருச்சி மாவட்ட ஆம்னிபஸ் உரிமையாளர் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் சங்க செயலாளர் பாண்டிசெல்வன், பொருளாளர் அருண்பாலாஜி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஆம்னி பஸ் நிலையத்தில் பஸ்கள் உள்ளே வருவதற்கும், வெளியி–்ல் செல்வதற்கும் தனித்தனியாக வழிகள் ஏற்பத்தப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பஸ்நிலையம் பின்புறத்தில் கார்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளே வருவதற்கும், நிறுத்துவதற்கும் இட வசதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சம் 200 பஸ்கள் வரை வந்து செல்ல இடவசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பயணிகளுக்கு குடிநீர் வசதி, கழிப்பறை வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

Tags : station ,
× RELATED தொண்டி போலீஸ் ஸ்டேசனில் கூடுதல் போலீசார் நியமிக்க மக்கள் கோரிக்கை