×

டிரான்ஸ்பார்மர் பழுதால் 2 நாட்களாக மின்சாரம் இல்லை

ராமநாதபுரம், அக்.26:  மண்டபம் முகாம் பகுதியில் டிரான்ஸ்பார்மர் பழுதால் 2 நாட்களாக மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மண்டபம் முகாம் ஏகேஎஸ் தோப்பில் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக குறைந்த அழுத்த மின்சாரம் இருந்தது. இதையடுத்து அப்பகுதிக்கென கடந்த வருடம் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. இருப்பினும் பகல் நேரங்களில் கூட மின்சாரம் சில நேரங்களில் கூடுதலாகவும் சில நேரங்களில் குறைவாகவும் வருகிறது. இதுபற்றி புகார் தெரிவித்தும் இப்பிரச்னையை அதிகாரிகள் சரி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. குறைந்த அழுத்த மின்சாரத்தால் வீடுகளில் உள்ள மோட்டார்கள் இயங்குவதில்லை. டியூப் லைட்கள், பிரிட்ஜ்கள், மின்சார அடுப்பு போன்றவைகளும் இயங்குவது கிடையாது. 2 அல்லது 3 நிமிடங்களுக்கு ஒருமுறை மின்சாரம் ஏற்ற இறக்கமாக உள்ளது.

மோட்டார்கள் வேலை செய்யாததால் வீடுகளில் தண்ணீர் பிரச்னை அதிகரித்து வருகிறது. குளிக்கவும் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை இடியுடன் கனமழை பெய்தபோது, மின்சாரம் தடைபட்டது. நேற்று மழை இல்லாத நிலையிலும் மின்சாரம் வரவில்லை. இதனால் கடந்த 2 நாட்களாக மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். இரவு நேரங்களில் மின் விசிறிகளும் இயங்காததால் வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட பலரும் தூங்க முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மின்வாரிய அதிகாரிகள் ஏகேஎஸ் தோப்பில் விரைவில் மின்வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

அப்பகுதியை சேர்ந்த முருகானந்தம் கூறுகையில், பெரிய போராட்டத்திற்கு பிறகு புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. இருப்பினும் மின்சாரம் சரியாக கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருகிறோம். ஏகேஎஸ் தோப்பு பகுதியில் குடியிருப்பு வீடுகள் ஆண்டுதோறும் அதிகரித்து வரும் நிலையில் மின் தேவையும் அதிகரித்து வருகிறது. அவ்வப்போது ஒரு லைன் கட்டாகி விடுகிறது. இதனால் ஒரு சில வீடுகளுக்கு மின்சாரம் இருக்கும். பல வீடுகளுக்கு மின்சாரம் இருக்காது. மழை காரணமாக நிறுத்தப்பட்ட மின்சாரம் நேற்று இரவு வரை வரவில்லை. அதிகாரிகளிடம் கேட்டால் டிரான்ஸ்பார்மர் பழுது என கூறுகின்றனர். மண்டபம் முகாமின் பிற பகுதிகளில் மின்சாரம் உள்ளது. அதிக மக்கள் தொகை இருக்கும் எங்கள் பகுதிக்கு உடனடியாக மின்சாரம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

Tags : Transformer ,ripening ,
× RELATED தென்மேல்பாக்கம் கிராமத்தில் எலும்பு...