பெரியகுளம் : தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. 10 நாட்களுக்கு முன்பு வரை பெய்த தொடர்மழை காரணமாக அருவியில் நீர் வரத்து சீராக உள்ளது. இதனால் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு தற்போது அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு பணியாளர்களும் கிறிஸ்மஸ் விடுமுறையில் உள்ளனர். அத்துடன் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் அதிக அளவில் சென்று வருகின்றனர்.
இதனால் கும்பக்கரை அருவிக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன்படி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து அருவியில் ஆனந்தமாக குளித்து வருகின்றனர். இதற்கிடையே கடந்த சில தினங்களாக பகல் நேரத்தில் மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் குளிர்ந்த நீரில் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்தினருடன் உற்சாகமாக நீராடி விடுமுறையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி செல்கின்றனர்.