பட்டுக்கோட்டை: தென் மத்திய ரயில்வே சார்பில் இன்று (24ம் தேதி) புதன்கிழமை முதல் தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்திலிருந்து வாராந்திர சிறப்பு விரைவு ரயில் வண்டி எண் 07695 இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் இன்று இரவு 7.50 மணிக்கு செகந்திராபாத்திலிருந்து புறப்பட்டு நல்கொண்டா, குண்டூர், தெனாலி, நெல்லூர், கூடூர் வழியாக நாளை25ம் தேதி (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடைந்து செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம் வழியாக பட்டுக்கோட்டைக்கு மாலை 4.50 மணிக்கு க்கு வருகிறது.
தொடர்ந்து அறந்தாங்கி, காரைக்குடி , சிவகங்கை , மானாமதுரை , ராமநாதபுரம் வழியாக வியாழக்கிழமை இரவு 11.40 மணிக்கு ராமேஸ்வரத்தை சென்றடைகிறது.மீண்டும் இந்த ரயில் (வண்டி எண் 07696) இதே வழித்தடத்தில் ராமேஸ்வரத்தில் 26ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8.50 மணிக்கு புறப்பட்டு பட்டுக்கோட்டைக்கு மதியம் 1.13 மணிக்கு வந்தடைந்து மீண்டும் சென்னை எழும்பூருக்கு இரவு 9.50 மணிக்கு சென்றடைகிறது. அதனைத் தொடர்ந்து செகந்திரபாத்திற்கு 27ம் தேதி சனிக்கிழமை நண்பகல் 12.50 மணிக்கு சென்றடைகிறது.
இந்த வாராந்திர சிறப்பு விரைவு ரயில் புதன்கிழமைகளில் இரவு செகந்தரபாத்தில் புறப்பட்டு வியாழக்கிழமை சென்னை எழும்பூர், பட்டுக்கோட்டை வழியாக ராமேஸ்வரத்திற்கு இரவு சென்று சேரும். மீண்டும் ராமேஸ்வரத்தில் வெள்ளிக்கிழமைகளில் காலை புறப்பட்டு பட்டுக்கோட்டை, சென்னை வழியாக செகந்திராபாத்திற்கு சனிக்கிழமைகளில் நண்பகலில் சென்று சேரும். இந்த ரயில் மூலமாக பட்டுக்கோட்டை பகுதி மக்கள் ராமேஸ்வரம் பகுதிக்கும், வியாழக்கிழமைகளிலும் வெள்ளிக்கிழமைகளில் சென்னை எழும்பூர், செகந்திராபாத் பகுதிகளுக்கும் செல்லலாம்.
இந்த ரயிலில் முன்பதிவில்லா பெட்டிகள் 5, படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் 10, முதல் வகுப்பு குளிர் சாதன வசதி கொண்ட பெட்டிகள் 2, இரண்டாம் வகுப்பு குளிர் சாதன வசதி கொண்ட பெட்டிகள் 2, சரக்கு மற்றும் மேலாளர் பெட்டிகள் 2 ஆக மொத்தம் 21 ரயில் பெட்டிகளை கொண்டிருக்கும். இந்த சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படுவதால் பட்டுக்கோட்டை, பேராவூரணி, அதிராம்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், ரயில் பயணிகள், வர்த்தகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த வழித்தடத்தில் செல்லும் இரண்டாவது சிறப்பு விரைவு ரயில் இதுவாகும்.
ஏற்கனவே எர்ணாகுளம் - ராமேஸ்வரம் சிறப்பு விரைவு ரயில் இந்த வழித்தடத்தில் கடந்த மாதம் முதல் சென்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த சிறப்பு விரைவு ரயிலுக்கு பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச்சங்கத்தின் சார்பில் பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில்நாளை மாலை 4.50 மணிக்கு வாழை மரம், தோரணம் கட்டி வாணவேடிக்கையுடன் பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு நிகழ்ச்சி நடத்த இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
