திருவெண்ணெய்நல்லூர் : திருவெண்ணெய்நல்லூர் அருகே வளையாம்பட்டு கிராமத்தில் விழுப்புரம் முதல் திருச்சி செல்லும் ரயில்வே இருப்பு பாதையில் ரயில்வே கேட்டு உள்ளது. நேற்று பண்ருட்டி வட்டம் அவியனூர் கிராமத்தைச் சேர்ந்த நாவன் மகன் சிவபூஷன் என்பவர் ஏனாதிமங்கலம் கிராமத்திலிருந்து புதுப்பேட்டை கிராமத்திற்கு டிராக்டர் டிப்பரில் வைக்கோலை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் திருச்சியிலிருந்து சென்னை செல்வதற்காக பல்லவன் எக்ஸ்பிரஸ் வந்து கொண்டிருந்தது.
அப்போது வளையாம்பட்டு ரயில்வே கேட் கீப்பர் கேட்டை மூடும்போது டிராக்டர் டிப்பர் வேகமாக வந்து கேட்டின் மீது மோதி சென்று சிறிது தூரத்தில் நின்றது. இதனால் கேட் மேலே தூக்கி வீசப்பட்டு உயரழுத்த மின்கம்பியில் பட்டு தீப்பற்றி வைக்கோல் டிராக்டர் எரிந்தது. மேலும் உயர் மின் அழுத்த கம்பியில் சிக்னல் கிடைக்கவில்லை. உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பிறகு விழுப்புரம் ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் தர் மற்றும் ரயில்வே ஊழியர்கள் ரயில்வே கேட் மற்றும் உயர் அழுத்த கம்பியினை சரி செய்தனர்.
மேலும் இது சம்பந்தமாக ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் பற்றி தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் தீயணைப்புத்துறையினர் டிராக்டர் டிப்பரில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். இந்த விபத்து காரணமாக திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த பல்லவன் எக்ஸ்பிரஸ், மதுரையிலிருந்து சென்னை நோக்கி வந்த வைகை எக்ஸ்பிரஸ், விழுப்புரத்தில் இருந்து மதுரை நோக்கி வந்த பேசஞ்சர் ரயில் ஆகிய ரயில்கள் காலை 9.15 மணிமுதல் 10.30 மணி வரை நின்று காலதாமதமாக சென்றது.