×

தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: தமிழக அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்களுக்கு தனிநபர்கள் அமைப்புகளுக்கு பசுமை சாம்பியன் விருது 100 நபர்களுக்கு வழங்கி, தலா ரூ.1 லட்சம் வீதம் பண முடிப்பும் வழங்க உள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை சிறப்பாக செயல்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்போர் நல சங்கங்கள், தனிநபர்கள், உள்ளாட்சிஅமைப்புகள், தொழிற்சாலைகளுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்பட உள்ளது.

சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை தயாரிப்புகள், பசுமை தொழில்நுட்பம் தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள், நிலைத்தகு வளர்ச்சி திடக்கழிவு மேலாண்மை, நீர் மேலாண்மை மற்றும் நீர் நிலைகள் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்திற்கு உட்படுதல் மற்றும் தணிப்பு நடவடிக்கை, காற்று மாசு குறைத்தல், பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சி மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கைகள், சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு, கடற்கரை பாதுகாப்பு நடவடிக்கை ஆகியவற்றிர்காக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மாவட்ட ஆட்சியரின் தலைமையில் அமைக்கப்பட்ட பசுமை சாம்பியன் விருதுக்கு தேர்வு செய்யும் குழு மூலம் தகுதி வாய்ந்த 100 தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களை ஒவ்வொரு வருடமும் தேர்வு செய்து வருகிறது.

இதற்கான விண்ணப்ப படிவம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய வலைதளத்தில் (www.tnpcb.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், திருவள்ளூர் என்கிற விலாசத்தில் தொடர்பு கொள்ளலாம். எனவே பசுமை சாம்பியன் விருதுக்கு மார்ச் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.



Tags : Apply for Tamil Nadu Green Champion Award; Collector information
× RELATED முறையான பராமரிப்பு இன்றி...