மும்பை: ஷாருக்கான் மகன் என்பதால் அவர் குறிவைக்கப்பட்டதாகவும், தனது மூன்று குழந்தைகளுக்கும் போதை பழக்கம் இல்லை என்று மூத்த நடிகர் சத்ருகன் சின்ஹா தெரிவித்தார்.
போதை பொருள் வழக்கு பாலிவுட் நட்சத்திரங்களை கலங்கடித்துள்ள நிலையில், பழம்பெரும் நடிகரும், அரசியல்வாதியுமான சத்ருகன் சின்ஹா தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘எனது குழந்தைகளான மகள் சோனாக்ஷி சின்ஹா, மகன்கள் லவ் சின்ஷா, குஷ் சின்ஹா ஆகியோர் போதை பொருள் பழக்கங்களில் ஈடுபட்டதில்லை.
ஷாருக்கானின் மகனை கைது செய்ததில் உள்நோக்கம் உள்ளது. மற்ற பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவோ அல்லது ஷாருக்கானின் புகழை கெடுக்கவோ எடுக்கப்பட்ட நடவடிக்கையாக இருக்கலாம். பிரபலங்கள் தங்களது பிஸியான வாழ்க்கையின் காரணமாக, தங்கள் குழந்தைகளை சரியான பாதையில் வளர்ப்பது சவாலானதாக இருப்பதாக கூறுகின்றனர். ஆனால், நான் என் குழந்தைகளிடம் போதை பொருள், புகையிலை பயன்படுத்துதல் ஆகியவற்றில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன். என் மகனையும், மகளையும் நன்றாக வளர்த்துள்ளேன்.
அவர்கள் போதை வஸ்துகளை பயன்படுத்தியதை நான் பார்த்ததில்லை. பொதுவாகவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் தொடர்ந்து கவனித்து வரவேண்டும். தவறான நபர்கள், நிறுவனங்களுடன் இருந்து விலகி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஷாருக்கானின் மகன் என்பதால் ஆர்யன் கானை மன்னிக்கக் கூடாது. ஆனால் அவர், ஷாருக்கானின் மகன் என்பதால் அவரை குறிவைக்கும் உரிமை யாருக்கும் இல்லை. ஆர்யன்கான் விஷயத்தில், நீதி வேண்டும்’ என்றார்.