வத்திராயிருப்பு: விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே கூமாப்பட்டி எஸ்ஐ ஆறுமுகசாமி, கடந்த 27ம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது டூவீலரில் வந்த மின்வாரிய ஊழியர் சைமனை சோதனை செய்தார். வாகனத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லை. ஒரே வாகனத்தில் 3 பேர் வந்துள்ளனர். இதனால் டூவீலரை எஸ்ஐ ஆறுமுகசாமி பறிமுதல் செய்தார். இதுகுறித்து உதவி மின்பொறியாளர் கோபாலசாமியிடம், சைமன் புகார் செய்தார். அவரது உத்தரவிற்கிணங்க கூமாபட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்லும் மின்வயர் துண்டிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதனால் 2 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் கூமாபட்டி போலீஸ் ஸ்டேஷன் இருளில் மூழ்கியது. இதன் பின் காவல்நிலையத்திற்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மாவட்ட எஸ்பி பெருமாளிடம், எஸ்ஐ ஆறுமுகசாமி புகார் அளித்தார். இதன் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் வத்திராயிருப்பு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
