சென்னை: திமுக முன்னாள் தலைவர் கலைஞர் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்ட மாரிதாஸ் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். தமிழகத்தின் முன்னேற்றம், பல்வேறு வளர்ச்சிகள் என அனைத்திலும் திமுக முன்னாள் தலைவர் மறைந்த கலைஞரின் பங்கு உண்டு, அவரின் சிறப்பான செயல்கள் குறித்தும், எந்தெந்த சூழ்நிலைகளில் எப்படி செயல்படுவார் எனவும் சமூக வலைதளங்களில் அவ்வப்போது அவரது ஆட்சியின் ஆளுமை குறித்து பலர் பகிர்ந்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த ஜூன் 6ம் தேதி மாரிதாஸ் என்பவர் யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அந்த வீடியோவில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் குறித்து தவறாகவும், அவரை பற்றி நல்ல விதமாக பரப்படும் தகவல்கள் தவறு என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் பெயருக்கும், ஆட்சிக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் பல்வேறு அவதூறு கருத்துகளை வெளியிட்டுள்ளார். இந்தநிலையில் கலைஞர் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்து, இறந்தவரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் வீடியோ பதிவிட்ட மாரிதாஸ் மீது அவதூறு சட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க, திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.