கர்ப்பிணி ஃபர்சானா பலத்திங்கல், செய்த குற்றத்துக்காக மகளிர் சிறையில் தண்டனை அனுபவிக்கிறார். அங்கு அவருக்கு ஒரு மகன் பிறக்கிறான். பிறகு சிறையில் இருந்து விடுதலையாகும் ஃபர்சானா பலத்திங்கல், யாரையும் நம்பாமல் தனது மகனுடன் வெவ்வேறு பெயர்கள், ஊர்கள், பணிகள் என்று அடையாளத்தை மாற்றிக்கொண்டு வாழ்கிறார். ஒரு கட்டத்தில் சிறுவனான மகனை பிரியும் சூழல் ஏற்படுகிறது. பிறகு என்ன நடக்கிறது என்பது உருக்கமான கிளைமாக்ஸ்.
நடிப்பில் ஸ்கோர் செய்துள்ள ஃபர்சானா பலத்திங்கல், அனைத்து உணர்வுகளையும் கண்களால் வெளிப்படுத்தி அசத்தியுள்ளார். அவரது மகன் சிறுவன் பாலனாக வரும் ஆதிசேஷன் கே.ஆர், வளர்ந்த பாலனாக வரும் சினான், அம்மாவின் பாசத்தை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர். மற்றும் ஜீன் பால் லால், கிரிஷ் ஏ.டி உள்பட அனைத்து நடிகர்களும் பொருத்தமான தேர்வு. சிறப்பு வேடத்தில் சிறப்பு சேர்த்துள்ளார், டொவினோ தாமஸ். மூதாட்டியின் பேச்சும், நடிப்பும் மனதில் நிற்கும்.
ஒளிப்பதிவாளர் ஷைஜு காலித், கேரள அடர்ந்த காடு மற்றும் மலைப்பகுதி லொகேஷன்களை கண்முன் நிறுத்தியுள்ளார். சுஷின் ஷியாம் பின்னணி இசை மிரட்டுகிறது. விவேக் ஹர்ஷன் எடிட்டிங், அஜயன் சாலிசேரி அரங்க வடிவமைப்பு கச்சிதமாக இருக்கிறது. ஜித்து மாதவன் எழுதியுள்ளார். ’மஞ்சும்மல் பாய்ஸ்’ சிதம்பரம் இயக்கியுள்ளார். தொடர்ச்சியான குற்றங்களை மறைக்க தந்திரங்கள் செய்வது நெருடுகிறது. எனினும் தாய்க்கும், மகனுக்குமான பாசப்பிணைப்பு முன்வந்து மனதை கலங்க வைக்கிறது.
