பெங்களூரு: ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த ‘காந்தாரா: எ லெஜண்ட் சாப்டர் 1’, விஜய் சேதுபதி ஜோடியாக ‘ஏஸ்’, சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘மதராஸி’ உள்பட கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நிறைய படங்களில் நடித்தவர், ருக்மிணி வசந்த். சமீபத்தில் அவரது போட்டோக்களை ஏஐ தொழில்நுட்பன் மூலம் ஆபாசமாக மார்ஃபிங் செய்து, சமூக வலைத்தளங்களில் சிலர் பரப்பி வந்தனர். இது தனது புகழுக்கு களங்கம் விளைவிப்பதாகவும், தனியுரிமையை மீறி மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் சொன்ன ருக்மிணி வசந்த், உடனே பெங்களூரு சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். பாகல்கோட்டையை சேர்ந்த ரவிகுமார் (24), ஷிவமொக்கா மாவட்டத்தை சேர்ந்த சந்திரகாந்த் (33), பெங்களூருவை சேர்ந்த ரஞ்சித் (25) ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

