×

நடிகைக்கு கொலை மிரட்டல்: ஐதராபாத் மாணவி கைது

பாலிவுட் மூத்த நடிகை சல்மா ஆகாவின் மகளும், நடிகையும், பாடகியுமான ஜாரா கான், அவுரங்கசீப் மற்றும் தேசி கட்டே ஆகிய இந்தி படங்களில் நடித்துள்ளார். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு கடந்த நவ. 6ம் தேதி பெண் ஒருவர் கொலை மிரட்டல் மற்றும் ஆபாச செய்திகளை அனுப்பி உள்ளார். இது தொடர்பாக ஜாரா கான், சம்பந்தப்பட்ட பெண் மீது மும்பையில் உள்ள ஓஷிவாரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதையடுத்து போலீசார் கொலை மிரட்டல் விடுத்த தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த எம்பிஏ பட்டதாரி மாணவியை கைது செய்துள்ளனர்.

இது குறித்து ஒஷிவாரா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தயானந்த் பங்கர் கூறுகையில், ‘நூரா சரவர் என்ற பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி மிரட்டல் விடுத்துள்ளார் அந்த பெண். புகார் அளித்த ஜாரா கான் மற்றும் அவரது சக ஊழியர்கள், குறிப்பிட்ட அரசியல் கட்சியுடன் இணைந்து செயல்படுவதாகவும், அதனால் அவரை குறிவைத்து மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது. அந்த பெண்ணுக்கு மனநலம் சரியில்லை. இதனால் கைது செய்து மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி உள்ளோம்’ என்றனர்.

Tags : Actress ,death ,Hyderabad ,student ,
× RELATED நீதிமன்றத்தில் கூட பாதுகாப்பில்லை...