×

ஞானம் சேர்க்கும் ஆதிபுரீஸ்வரர்

நம்பிக்கை வைத்தோம் நாயகன்
நமச்சிவாய மலரடி சரணம்!
தும்பிமுகன் தந்தை ஒற்றியூர்
அம்பிகை மணாளன் தியாகேசன்!
அழியாவாழ்வின் அருமருந்தென
ஆதிபுரி அருளும் ஈசன்!
ஞானம் பிறக்க வழிகாட்டும்
ஞாலம் கூடி நின்று வாழ்த்த
ஆலம் உண்ட நீலகண்டன்
அலைவீசும் ஆதிபுரி ஆளும் சங்கரனை

கலைபேசும் வடிவுடைஅம்மையை
வலைவீசி நலம் கோடிபெறுவோம்!
ஆண்டாண்டு காலம் அழுதாலும்
மாண்டவர் மீண்டு வருவதில்லை
கண்டுகொள் நிலையான தத்துவம்
வண்டுவிழி தேவியுடன் சிவன்
உண்டு உறையும் ஆதிபுரிகாண
பண்டுசெய் தவத்தாலெய்தும் ஞானம்!

ஒற்றியூர் அருட்கடல் நகரமதை
சுற்றிவந்து எழுத்தறி நாதன் கழல்
பற்றி பாசப்பற்ற றுப்போம்!
வெற்றிகொள் ஞானம் கைகூடும்
நெற்றி திலகவடிவழகி கருணையால்
வற்றாத ஆழி செல்வஞானம் சேரும்!
இனியும் பிறவி நமக்கேது
பட்டினத்தார் நறைமொழி பருகியபின்னே!
இனியும் பிறவி உள்ளதோ கூறு
பனிநாயகம் ஒற்றியூரனை சரணடைந்தபின்னே!

நனிபேதையன் நாவுளறும்  சொல்கேட்டு
கனிமுகம் கடிமலர் காலைப்பொழுதாய்
ஞானக்கட லோரம் வாழும்
படம்பக்கநாதன் பிறவிப்பிணி தீர்ப்பான்!
சுந்தரருக்காக தோழமை தூது சென்று
சங்கிலியாரின் காதல் தந்த இறைவன்!
பசியோடு படுத்த வள்ளலாருக்கு
பரிந்து அமுதூட்டிய இறைவி!
பக்திவிழா தினம் கண்டு மகிழ

பக்தர்கள் கூடும் திருவொற்றி யூரில்
அலைகள் ஓயாது கரை தொடும்
அம்பிகை மதிமுகம் ஞானம் தரும்!
ஆனந்தம் தரும் ஆதிபுரி உறை
அம்பிகைநாதன் துணையிருக்க ஏதுகுறை!
ஐந்தெழுத்தில் திளைப்போம் முழுராத்திரி
இந்திரபதவி இறைவரம் சேர்க்கும் சிவராத்திரி!

தொகுப்பு: விஷ்ணுதாசன்

Tags :
× RELATED துலாம் ராசியினரின் இருக்கு – இல்லை முரண்பாடுகள்