×

வேண்டுதல் நிறைவேற்றும் குண்டாங்குழி மகாதேவர்

ஆன்மிக பூமியான புதுச்சேரியில் திரும்பிய திசையெல்லாம் ஆலயங்களை காணமுடியும். மணக்குள விநாயகர், வேதபுரீஸ்வரர், திருக்காமீஸ்வரர், வரதராஜபெருமாள், வன்னியபெருமாள் என பல்வேறு கோயில்கள் உள்ளன. அந்த வகையில் புதுவை விழுப்புரம் சாலையில் திருபுவனை அடுத்த மதகடிப்பட்டில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட குண்டான்குழி மகாதேவர் கோயில் உள்ளது. மதகடிப்பட்டு மாட்டுச்சந்தை திடலின் அருகே இக்கோயில் அமைந்துள்ளது. கி.பி 9851018 ஆண்டு முதலாம் இராஜராஜசோழனால் கட்டப்பட்டது என்று இக்கோயிலில் உள்ள கல்வெட்டு கூறுகிறது. மேலும் இக்கோயிலில் சிறிது உடைக்கப்பட்ட நிலையில் உள்ள சிவலிங்கமே மூலவராக உள்ளார்.

மேற்கு நோக்கிய கோயில்:  

கூடுதல் சிறப்பாக இக்கோயில் வாசல் மேற்கு நோக்கி உள்ளது. கோயிலின் வலது புறம் அகிலாண்டேஸ்வரி அம்மன் முழுஉருவச்சிலை உள்ளது. இந்த கோயிலின் இடதுபுறம் விநாயகருக்காக கட்டப்பட்ட மாடம் உள்ளது. ஆனால் விநாயகர் சிலை இல்லை.கோவிலின் கிழக்கே பெரியகுளம் உள்ளது. இந்த கோவிலை கட்டிய அரசர் முதலில் குளத்தை வெட்டிய பின்பே கோவில் கட்டப்பட்டது என்று இங்குள்ள கல்வெட்டு கூறுகிறது. மேலும் இங்குள்ள கருவறை சதுரமாகவும் மேலேயுள்ள கிரீடம் வட்டமாகவும், சிகரம் உருண்டையாகவும் உள்ளது. கருவறை வெளிச்சுவற்றை அணி செய்த தட்சணாமூர்த்தி, பிரம்மா, லிங்கோத்பவர் போன்ற எழில்மிக்க சிற்பங்கள் தற்சமயம் புதுவை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

விமானத்தின் கோட்டங்களில் விஷ்ணு, தட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியர், பிரம்மா ஆகியோரின் சிற்பங்கள் உள்ளன. இங்கு சப்தமாதர்களுக்கு தனி சன்னதியும் இருந்துள்ளது. சோழர்காலத்தில் சப்தமாதர்களுக்கு என்று விசேஷ வழிபாடு நடைபெற்றுள்ளது. இக்கோவிலில் முதலாம் இராஜராஜன், இராஜேந்திரன், முதலாம் இராஜாதிராஜன், முதலாம் குலோத்துங்கன் போன்ற அரசர்களின் கல்வெட்டுகள் உள்ளன. இவ்விடம் குண்டாங்குழி என்றும் இந்த கோவிலில் இருக்கும் தேவர் குண்டாங்குழி மகாதேவர் என்று அழைக்கப்படுகிறார். கடந்த காலத்தில் இவ்வூர் திருபுவனை மகாதேவிச் சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் திருபுவனை என்று அழைக்கப்படுகிறது.

பிரதோஷ வழிபாடு:

இந்த கோவில் முழுமையாக கட்டி முடிக்கப்படாமல் பாதி வேலைப்பாடு களுடனேயே காட்சியளிக்கிறது. மேலும் இங்கு கோவிலில் வைப்பதற் காக செதுக்கப்பட்ட கல் சிற்பங்கள் கீழே வைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த கோவிலில் விசேஷ வழிபாடு பிரதோஷ நாட்களில் மட்டுமே நடைபெறும். அப்போது சுற்றுப்புற கிராம மக்கள் ஏராளமானோர் வந்து வழிபட்டு செல்கின்றனர். வேண்டுதலை நிறைவேற்றும் சக்தி இந்த மகாதேவருக்கு உண்டு என்ற ஐதீகம் நிலவுவதால் பிரதோஷகாலங்களில் ஏராளமான மக்கள் நம்பிக்கையுடன் இங்கு வந்து சிவபெருமானை வழிபட்டுச்செல்கின்றனர்.

செல்வது எப்படி?

புதுச்சேரியில் இருந்து மதகடிப்பட்டு பேருந்து நிறுத்தத்தில் இறங்கி 200 மீட்டர் தூரத்திலேயே கோவில் உள்ளது. முன்பு தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் இருந்த இக்கோயில் தற்போது புதுச்சேரி அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

Tags : Kundanki Mahadeva ,
× RELATED துலாம் ராசியினரின் இருக்கு – இல்லை முரண்பாடுகள்