×

ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள ஏகாட்டூர் சுங்கச்சாவடியை மூட பொது மக்கள் கோரிக்கை

திருப்போரூர்: ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள ஏகாட்டூர் சுங்கச்சாவடியை மூட பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் இருந்து மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி வரை பழைய மாமல்லபுரம் சாலை என அழைக்கப்படுகிறது. இந்த சாலையானது கடந்த 2006ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது சிறுசேரி சிப்காட் வரை 6 வழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டு சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டது. பெருங்குடி, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், மேடவாக்கம் சாலை, ஏகாட்டூர் ஆகிய இடங்களில் சுங்கச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டன. கடந்த சட்டமன்ற தேர்தலின்போது ஓஎம்ஆர் சாலையில் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. தேர்தலில் வென்று ஆட்சி அமைத்ததும் ஓஎம்ஆர் சாலை சுங்கச்சாவடிகள் அகற்ற முடிவு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. அப்போது, சுங்கச்சாவடியில் பணிபுரியும் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தங்களின் பணிப்பாதுகாப்பு குறித்து வேதனை தெரிவித்தனர். இதையடுத்து, கேளம்பாக்கம் அருகே ஏகாட்டூர் சுங்கச்சாவடி தவிர மற்ற நான்கு இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகள் அனைத்தும் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்து செயல்படுத்தியது. தற்போது, கடந்த 6 மாதங்களாக ஏகாட்டூர் சுங்கச்சாவடி மட்டும் செயல்பாட்டில் உள்ளது.வாகனப் போக்குவரத்து அதிகம் உள்ள பெருங்குடி, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், மேடவாக்கம் சாலை ஆகிய சுங்கச்சாவடிகள் மூடப்பட்டு விட்ட நிலையில் ஏகாட்டூரில் மட்டும் சுங்கச்சாவடி செயல்பட்டு வருவது இப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் மாதவரம் – சிறுசேரி இடையே மெட்ரோ ரெயில் பணிகள் தொடங்க உள்ளன. இதற்கான ஆரம்ப கட்ட ஆய்வுகள், மண் பரிசோதனைகள் முடிந்து விட்டன. ஒப்பந்தப்புள்ளியும் கோரப்பட்டுள்ளது. ஓரிரு மாதங்களில் மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்பட்டால் போக்குவரத்து நெரிசல் அதிகமாகும் என்ற கருத்தும் நிலவுகிறது. இந்நிலையில், இந்த ஏகாட்டூர் சுங்கச்சாவடியை மட்டும் தொடர்ந்து செயல்படுத்துவது சரியா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆகவே, சென்னைப் புறநகர் மக்களின் கோரிக்கையை ஏற்று ஓ.எம்.ஆர். சாலையில் இருந்த மற்ற சுங்கச்சாவடிகளை அகற்றியது போன்று ஏகாட்டூர் சுங்கச்சாவடியையும் அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றி வரும் தி.மு.க. அரசு ஓ.எம்.ஆர். குடியிருப்புவாசிகளின் கோரிக்கையையும் நிறைவேற்றும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது. …

The post ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள ஏகாட்டூர் சுங்கச்சாவடியை மூட பொது மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : O.O. MM ,Aecatur Tanksway ,R Road ,Thirupporur ,O. MM ,Central Kylash ,Chennai ,Aecatur Targo ,
× RELATED காரில் ரூ.11 லட்சம் சிக்கிய விவகாரம்:...