சென்னை: ஸ்பேட்எக்ஸ் திட்டத்தில் முக்கிய சோதனையான ஒன்றிணைக்கப்பட்ட விண்கலன்கள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. விண்வெளியில் விண்கலன்களை ஒன்றிணைக்கும் ஸ்பேஸ் டாக்கிங் என்ற தொழில்நுட்பத்தை சோதனை செய்வதற்காக இஸ்ரோ ஸ்பேட்எக்ஸ் திட்டத்தை செயல்படுத்தியது. இதற்காக 2 விண்கலன்களை பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலம் கடந்த டிச.30ம் தேதி விண்ணில் ஏவியது. ஸ்பேட்எக்ஸ் ஏ, ஸ்பேட்எக்ஸ் பி ஆகிய 2 விண்கலன்களும் பூமியில் இருந்து 475 கி.மீ தூரத்தில் திட்டமிட்ட புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. ஸ்பேட்எக்ஸ் திட்டத்தில் முக்கிய சோதனையான ஸ்பேஸ் டாக்கிங் எனப்படும் விண்கலன்களை ஒன்றிணைக்கும் சோதனை, அதாவது ஸ்பேட்எக்ஸ் ஏ, ஸ்பேட்எக்ஸ் பி விண்கலன்கள் ஒன்றிணைக்கப்பட்டு ஒரு விண்கலத்தில் இருந்து மற்றொரு விண்கலத்திற்கு மின் ஆற்றல் (எல்க்ட்ரிகல் எனர்ஜி) அனுப்பப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் விண்கலன்கள் ஒன்றிணைக்கும் சோதனை ஜன.7 நடத்தப்படும் என இஸ்ரோ முன்னாள் தலைவர் சோம்நாத் கூறியிருந்தார். ஆனால் விண்கலன்கள் இணைப்பு பரிசோதனையை மேற்கொள்ள ஆய்வு மையத்தில் செய்யப்பட சோதனைகளில் சரிபார்ப்பு தேவைப்படுவதால் சோதனையும் ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த சோதனை ஜன.9ம் தேதி நடத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்தது. இந்நிலையில் விண்கலன்களுக்கு இடையே 225 மீ தூரத்தை எட்டுவதற்கான ஒத்திகை மேற்கொண்டபோது, எதிர்பார்த்ததை விட அதிகமாக அதிர்வுகள் இருப்பது கண்டறியப்பட்டது.
இதனால் திட்டமிடப்பட்ட விண்கலன்கள் இணைக்கும் பணி ஒத்திவைக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்தது. இதையடுத்து மீண்டும் விண்கலன்களுக்கு இடையேயான தூரம் படிப்படியாக குறைக்கப்பட்டு இறுதியாக மூன்று மீட்டர் இடைவெளியில் விண்கலன்கள் நிறுத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து கடந்த ஜனவரி 16ம் தேதி விண்கலன்களை ஒன்றிணைக்கும் ஸ்பேஸ் டாக்கிங் சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் ஸ்பேட்எக்ஸ் திட்டம் வெற்றி பெற்றதாக இஸ்ரோ தெரிவித்தது. இந்த திட்டம் வெற்றியடைந்த நிலையில் 2 விண்கலன்களை இணைக்கும் ஒருங்கிணைப்பு தொழில்நுட்பத்தை கொண்ட 4வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. இதையடுத்து இரட்டை விண்கலன்களுக்கு இடையே மின் எரிபொருள் பரிமாற்றம் மற்றும் விண்கலன்களை பிரித்தல் ஆகிய பரிசோதனைகள் செய்யப்பட இருப்பதாக இஸ்ரோ தெரிவித்திருந்தது.
இந்நிலையில் சுமார் 2 மாதங்களுக்கு பின்னர் இரட்டை விண்கலன்கள் வெற்றிகரமாக நேற்று விடுவிக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்தது. மேலும், விண்வெளியில் ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் ஒன்றில் இருந்து மற்றொன்று விடுவிக்கப்படும் நிகழ்வின் காணொலி மற்றும் படங்ளை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. அதேநேரம் இந்த திட்டத்தின் முக்கிய அம்சமான விண்கலன்களுக்கு இடையேயான மின் எரிபொருள் பரிமாற்றம் பரிசோதனை குறித்த தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை. தொடர்ந்து வரும் நாட்களில் மீண்டும் விண்கலன்கள் ஒருங்கிணைக்கப்பட்டு மின் எரிபொருள் பரிமாற்றம் சோதனைகள் மேற்கொள்ளப்படலாம் என்று விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்தனர்.
The post ஸ்பேட்எக்ஸ் திட்டத்தில் முக்கிய சோதனை வெற்றி; விண்கலன்கள் வெற்றிகரமாக பிரிப்பு: இஸ்ரோ தகவல் appeared first on Dinakaran.
