கடலூர்: மணிமுத்தாற்றில் திதி கொடுத்தவர்கள், திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி தவித்தனர். அவர்களை போலீசார் பத்திரமாக மீட்டனர். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த நல்லூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வில்வனேஸ்வரர் கோயில் உள்ளது. மணிமுத்தாறு, கோமுகி, மயூரநதி ஆகிய மூன்று நதிகள் கூடும் இடத்தில் இக்கோயில் அமைந்திருப்பது தனிச்சிறப்பு. மாசி மகத்தை முன்னிட்டு, நேற்று நல்லூர் மணிமுத்தாற்றில் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.
நேற்றுமுன்தினம் பெய்த மழையால் சுற்றுவட்டார பகுதி ஓடைகளில் இருந்து மணிமுத்தாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் முன்அறிவிப்பு செய்திருந்தும் பலர் ஆற்றில் இறங்கி திதி கொடுத்துள்ளனர். சிறிது நேரத்தில் தண்ணீரின் அளவு மளமளவென அதிகரித்தது. இதனால் திதிகொடுத்துக்கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பலர் அங்கிருந்து வெளியே ஓட்டம் பிடித்தனர். ஆனால் சிலர் வெளியே வரமுடியாமல் வெள்ளத்தில் சிக்கித்தவித்தனர்.
உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வேப்பூர் இன்ஸ்பெக்டர் சசிகலா, முதல் நிலை காவலர் தென்எழிலன் ஆகியோர் விரைவாக செயல்பட்டு ஆற்றில் தவித்த பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றினர். திதி கொடுக்க வந்த மாற்றுத்திறனாளி ஒருவர் ஆற்றின் நடுவே சிக்கிக்கொண்டார். வெள்ளம் பெருக்கெடுத்து வந்ததால் அவரால் நடந்து கரையை கடக்க முடியவில்லை. தண்ணீரில் சிக்கி கொண்டிருந்த அவரை போலீஸ்காரர் தென்எழிலன் தூக்கிக் கொண்டு வந்து கரை சேர்த்தார். ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தபோது துரிதமாக செயல்பட்ட போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.
The post மணிமுத்தாற்றில் திடீர் வெள்ளம்; திதி கொடுத்தவர்கள் சிக்கி தவிப்பு: போலீசார் மீட்டனர் appeared first on Dinakaran.
