சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா நேற்று வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காவல் சித்ரவதை வழக்கில் காவல் ஆய்வாளர் தர் உள்ளிட்ட காவலர்கள் குற்றவாளிகள் என்று மதுரை அமர்வு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. நீதி நிலை நிறுத்தப்பட்டுள்ளது. காவலர் அடித்ததால்தான் தந்தை, மகன் காயங்கள் ஏற்பட்டுள்ளது என்பது ஊர்ஜிதம் ஆகிறது.
அதிமுக ஆட்சியில் காவல் துறையின் செயல்பாடு மற்றும் மனித உரிமைகள் குறித்து நாடு முழுவதும் பெரிய விவாதத்தை ஏற்படுத்திய வழக்கில் தற்போது ஒன்பது காவலர்களும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கியிருப்பது வரவேற்கத்தக்க ஒன்று. காவல்துறையினர் மனித உரிமைகளை மதித்து நடக்க வேண்டும் என்பதற்கான முன்னோடி தீர்ப்பாக இதனை நாம் பார்க்க வேண்டி இருக்கிறது. காவல்துறையினர் இதற்கு பிறகாவது முறையான விதிமுறைகளை பின்பற்றி மனித உரிமையை காக்க உறுதி எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
