×

மகளிர் தினத்தை முன்னிட்டு சைபர் கிரைம் பிரிவின் தூதுவர்களாக பெண் ஆட்டோ ஓட்டுநர்கள்: கொடியசைத்து துவக்கம்

சென்னை: சர்வதேச மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 2025-ம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தின் கருப்பொருள் “அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கும்: உரிமைகள், சமத்துவம், அதிகாரமளித்தல்” என்பதாகும். இந்த கருப்பொருள் சம உரிமைகள், சம அதிகாரிப்பகிர்வு, சம வாய்ப்புகள் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளிப்பதை உறுதி செய்வதன் மூலம் எதிர்காலத்தை வளப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், சமூகத்திற்கு பெண்களின் பங்களிப்பை நினைவுகூறும் வகையில், சைபர் குற்றப்பிரிவு தலைமையகம், நகரம் முழுவதும் பயணிகளை இலக்காகக் கொண்டு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. இந்த பிரசாரத்தில் 1930 ஹெல்ப்லைன் எண் அனைவரையும் சென்றடைய, பல குடியிருப்பாளர்களின் பொதுவான போக்குவரத்து முறையாக இருக்கும் ஆட்டோ ரிக்ஷாக்களில் 24*7 சைபர் உதவி எண் 1930 ஸ்டிக்கர்களை ஒட்டுவதும் அடங்கும்.

சைபர் குற்றப்பிரிவின் கூடுதல் காவல் துறை தலைமை இயக்குநர் டாக்டர். சந்தீப் மிட்டல், ஐ.பி.எஸ்., அவர்கள் சைபர் கிரைம் பிரிவின் தூதுவர்களாக பெண் ஆட்டோ ஓட்டுநர்களை இணைத்து. 1930 ஹெல்ப்லைன் எண்ணை பிரபலப்படுத்துவதற்காக அவர்களின் ஆட்டோ ரிக்ஷாக்களில் 1930 ஹெல்ப்லைன் ஸ்டிக்கர்களை ஒட்டுவதன் மூலம் பெண் தூதுவர்களை துவக்கி வைத்தார். சைபர் குற்றங்களிலிருந்து பாதுகாப்பாக இருப்பது தொடர்பாக சைபர் கிரைம் பிரிவு ஏற்கனவே விழிப்புணர்வு பிரச்சாரத்தினை தொடங்கியுள்ளது. இதன்மூலமாக, சைபர் கிரைம் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் 10000க்கும் மேற்பட்ட ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்கள் இணைக்கபட்டுள்ளனர். பெண்களின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு சைபர் கிரைம் பிரிவு “பெண்கள் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பது” என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி பயிலரங்கு ஏற்பாடு செய்திட முன்முயற்சி எடுத்துள்ளது.

சைபர் கிரைம் பிரிவின் கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் டாக்டர். சந்தீப் மிட்டல், ஐ.பி.எஸ்., அவர்கள் ஒரு நாள் பயிற்சி பயிலரங்கினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அதன் தொடர்ச்சியாக, “பணிக்சூழலில் மன அழுத்தத்தைக் கையாளுதல்” என்ற தலைப்பில் மன, உடல் மருத்துவம் மற்றும் வாழ்க்கை முறை அறிவியல் துறையின் பேராசிரியரும் தலைவருமான டாக்டர். சி.சி.மாதங்கி ஆற்றிய சொற்பொழிவுடன் பயிலரங்கம் தொடங்கியது. அதைத் தொடர்ந்து அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியின் மூத்த உதவிப் பேராசிரியர் டாக்டர் விஜய் உஷாராஜ் மற்றும் அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியின் மூத்த உதவிப் பேராசிரியர் டாக்டர் சங்கமித்ராய் ஆகியோர் “பெண்களுக்கான ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு” என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினர்.

பொதுமக்களுக்கான ஆலோசனைகள்:

1. தற்போதைய டிஜிட்டல் உலகில் “டிஜிட்டல் கைது” என்று எதுவுமில்லை. எனவே, யாரும் டிஜிட்டல் கைது எனும் பீதி மற்றும் குழப்பத்திற்கு ஆளாகக்கூடாது.

2. குறுகிய காலத்தில் பெரிய வருமானத்தை நோக்கிய முதலீடுகள் தொடர்பான விளம்பரங்களால் ஈர்க்கப்படுவதை தவிர்ப்பதோடு மற்றும் சமூக ஊடக தளங்கள் மூலம் பெறப்பட்ட விளம்பரங்களை அடிப்படையாகக் கொண்டு எந்தவொரு அறியப்படாத வலைத்தளங்கள் அல்லது பயன்பாடுகளிலும் ஒருபோதும் முதலீடு செய்ய வேண்டாம்.

3. எந்தவொரு இணைப்புகளையும் கிளிக் செய்வதற்கு முன் ஆய்வு செய்வதோடு. பெறப்படட்ட தொடர்பற்ற இணைப்புகளை எப்போதும் சந்தேகிக்க வேண்டும்.

4. உங்கள் கணக்கைச் சரிபார்த்தல் கடவுச்சொல்லை மீட்டமைத்தல் அல்லது பணத்தை மாற்றுதல் போன்ற உடனடி நடவடிக்கை எடுக்க மின்னஞ்சல் உங்களிடம் கேட்டால் எச்சரிக்கையாக இருங்கள்.

5. உங்கள் கடவுச்சொல்லுடன் கூடுதலாக உங்கள் மின்னஞ்சல் கணக்குகளுக்கு இரு காரணி அங்கீகாரத்தை (2FA) இயக்கவும்.

6. வலுவான மற்றும் சிக்கலான கடவுச்சொல்லை உறுதி செய்யவும்.

7. நம்பகமான மூலங்களிலிருந்து மொபைல் பயன்பாடுகளையும் (Mobile Apps) பதிவிறக்கவும் செய்வதோடு, நம்பகமற்ற மூன்றாம் தர பயன்பாடுகளை தேர்வு செய்வதை தவித்திடவும் வேண்டும்.

The post மகளிர் தினத்தை முன்னிட்டு சைபர் கிரைம் பிரிவின் தூதுவர்களாக பெண் ஆட்டோ ஓட்டுநர்கள்: கொடியசைத்து துவக்கம் appeared first on Dinakaran.

Tags : CYBERCRIME ,'S DAY ,Chennai ,International Women's Day ,International Women's Day 2025 ,Women's Day ,
× RELATED சென்னை முழுவதும் சீரான குடிநீர்...