×

ரஞ்சி கோப்பை இறுதிக்கு தகுதி விட்டுத்தராத விதர்பா வீறுகொண்ட கேரளா: 26ம் தேதி மும்பையில் கதகளி

மும்பை: ரஞ்சி கோப்பை அரையிறுதியில் வென்ற விதர்பா, கேரளா அணிகள், வரும் 26ம் தேதி மும்பையில் நடைபெறும் இறுதிப் போட்டியில் மோதவுள்ளன. ரஞ்சி கோப்பைக்காக நாக்பூரில் நடந்த அரையிறுதியில் விதர்பா – மும்பை அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் விதர்பா 383 ரன்கள் குவித்தது. பின் ஆடிய மும்பை 270 ரன்கள் எடுத்தது. அதைத் தொடர்ந்து 2வது இன்னிங்சில் விதர்பா அணி 292 ரன்கள் எடுத்ததை அடுத்து, 406 ரன் வெற்றி இலக்குடன் மும்பை களமிறங்கியது. 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 83 ரன் எடுத்திருந்த மும்பை 5ம் நாளான நேற்று ஆட்டத்தை தொடர்ந்தது. 97.5 ஓவர் முடிவில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 325 ரன் எடுத்தது. இதனால், 80 ரன் வித்தியாசத்தில் விதர்பா வெற்றி பெற்று இறுதிக்கு தகுதி பெற்றது.

அகமதாபாத் நகரில் நடந்த மற்றொரு அரையிறுதியில் கேரளா- குஜராத் அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் கேரளா 457 ரன்கள் விளாசியது. 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் குஜராத் முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 429 ரன் எடுத்திருந்தது. கடைசி நாளான நேற்று குஜராத் முதல் இன்னிங்சை தொடர்ந்தது. 177.4 ஓவர் முடிவில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 455 ரன் எடுத்தது. பின், 2வது இன்னிங்சை ஆடிய கேரளா 4 விக்கெட் இழப்புக்கு 114 ரன் எடுத்தபோது ஆட்டம் முடிவுக்கு வந்தது. அதையடுத்து, முதல் இன்னிங்சில் 2 ரன் கூடுதலாக எடுத்திருந்த கேரளா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதனால், அந்த அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
வரும் 26ம் தேதி மும்பையில் நடக்கும் இறுதிப் போட்டியில் கேரளா, விதர்பா அணிகள் மோதவுள்ளன.

The post ரஞ்சி கோப்பை இறுதிக்கு தகுதி விட்டுத்தராத விதர்பா வீறுகொண்ட கேரளா: 26ம் தேதி மும்பையில் கதகளி appeared first on Dinakaran.

Tags : Vidarbha ,Kerala ,Ranji Cup ,Kathakali ,Mumbai ,-final ,Nagpur ,Dinakaran ,
× RELATED பிட்ஸ்