சென்னிமலை, பிப்.5 சென்னிமலை அருகே தேங்காய் நார் ஏற்றி சென்ற மினி லாரி, மின் கம்பியில் உரசியதால் தீ விபத்து ஏற்பட்டது. பெருந்துறை மருதம் நகரை சேர்ந்தவர் சண்முகம் (61). இவர் மினி லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று சண்முகம், சென்னிமலை அருகே ஈங்கூரை சேர்ந்த ஜெகநாதன் என்பவரின் தேங்காய் குடோனில் இருந்து தேங்காய் நார் ஏற்றி கொண்டு செங்குளம் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, செங்குளம் பிரிவு அருகே சாலையோரத்தில் இருந்த மின் கம்பியில் சண்முகம் ஓட்டி சென்ற மினி லாரி உரசியது. இதனால், லாரியில் இருந்த தேங்காய் நாரில் திடீரென தீ பிடித்தது. அதிர்ச்சியடைந்த சண்முகம் உடனடியாக மினி லாரியில் இருந்து கீழே இறங்கினார். தகவலறிந்து வந்த பெருந்துறை தீயணைப்புத் துறையினர், தீயை அணைத்தனர்.
ஆனால், மினி லாரியும், தேங்காய் நாரும் முழுமையாக தீயில் எரிந்து சேதமானது. தேங்காய் நாரை உயரமாக மினி லாரியில் கட்டியதால், மின்கம்பி உரசி தீ விபத்து ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும், இது குறித்து சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post தேங்காய் நார் ஏற்றி சென்ற மினி லாரி மின் கம்பியில் உரசி தீ விபத்து appeared first on Dinakaran.
