- ரயில்வே போலீஸ் நிலையம்
- ஊட்டி
- நீலகிரி மலை ரயில்வே
- மேட்டுப்பாளையம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- காவல் நிலையம்
ஊட்டி, டிச. 4: நூற்றாண்டு பழைமைவாய்ந்த நீலகிரி மலை ரயில் மேட்டுபாளையத்தில் இருந்து ஊட்டி வரை இயக்கப்படுகிறது. இதற்கென ஊட்டியில் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பிற்கென தமிழக காவல்துறையின் ரயில்வே காவல் நிலையம் படகு இல்ல சாலையோர்த்தில் அமைந்துள்ளது. இந்நிலையில் பெஞ்சல் புயல் தாக்கம் காரணமாக கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
குறிப்பாக ஊட்டியில் நல்ல மழை பொழிவு இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை ஊட்டியில் பரவலாக கனமழை பெய்த நிலையில் ஊட்டி நகரின் மழைநீர் பெருக்கெடுத்தது. கோடப்பமந்து கால்வாயில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் படகு இல்ல சாலையில் ரயில்வே பாலத்திற்கு அடியில் மழைநீர் தேங்கியது. மேலும் தாழ்வான பகுதியில் அமைந்துள்ள ரயில்வே காவல் நிலையத்திற்குள் மழைநீர் புகுந்ததால் காவலர்கள் உள்ளே சென்று பணியாற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘கடந்த பல ஆண்டுகளாகவே ஒவ்வொரு மழை காலங்களிலும் கோடப்பமந்து கால்வாயில் பெருகெடுத்து ஓடும் மழைநீர், காவல் நிலையத்திற்குள் புகுந்து விடுகிறது. கழிவுநீருடன் புகுவதால் பெரும் அவதிக்குள்ளாகிறோம். எங்களுடைய வாகனங்கள் மட்டுமின்றி ஆவணங்களையும் பாதுகாப்பதில் சிரமம் ஏற்படுகிறது. மழை நின்ற பின், நீரை வெளியேற்றுவதற்குள் படாதபாடு பட்டு விடுகிறோம். கடந்த பல ஆண்டுகளாவே மழைநீர் புகுந்து கட்டிடமும் வலுவிழந்து காணப்படுகிறது. எனவே காவலர்களின் நலன் கருதி ரயில்வே காவல் நிலையத்தை உயரமான இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும்’’ என்றனர்.
The post ரயில்வே காவல் நிலையத்தில் அடிக்கடி புகுந்து வரும் மழை நீர் appeared first on Dinakaran.
