×

போக்சோ வழக்குகளை தீர்த்து வைப்பதில் தமிழ்நாடு சூப்பர்: ஒன்றிய அரசு தகவல்

புதுடெல்லி: போக்சோ வழக்குகளை தீர்த்து வைப்பதில் தமிழ்நாடு சிறப்பாக செயல்படுகிறது என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் இது தொடர்பான கேள்விக்கு ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் கூறியதாவது: நாடு முழுவதும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் வழக்குகளைக் கையாள 410 பிரத்யேக போக்சோ நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

2019ம் ஆண்டு முதல் தற்போது வரை இந்த நீதிமன்றங்கள் மொத்தம் 2,99,759 வழக்குகளை பதிவு செய்துள்ளன. அவற்றில் 1,62,497 வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன. உத்தரப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள 74 சிறப்பு போக்சோ நீதிமன்றங்களில் 90,822 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் 34,998 வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன. மத்தியப் பிரதேசத்தில் 57 போக்சோ நீதிமன்றங்கள் 29,419 வழக்குகளைக் கையாள்கின்றன. அங்கு 22,456 வழக்குகளைத் தீர்க்கின்றன.

46 நீதிமன்றங்களைக் கொண்ட பீகார் 30,203 வழக்குகளை விசாரித்து 11,798 வழக்குகளைத் தீர்த்துள்ளது. 30 நீதிமன்றங்களைக் கொண்ட ராஜஸ்தானில் 14,938 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 10,138 வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன. குஜராத்தில் 24 நீதிமன்றங்கள் 14,524 வழக்குகளை விசாரித்து 9,793 வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன. ஆந்திரா, அசாம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் போக்சோ வழக்குகளில் சிறப்பாக செயல்படுகின்றன. ஆந்திரப் பிரதேசத்தில் 16 நீதிமன்றங்கள் உள்ளன.

அங்கு 11,774 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 4,899 வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன. 17 நீதிமன்றங்களைக் கொண்ட அசாமில் 11,756 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 5,893 வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 14 போக்சோ நீதிமன்றங்கள் 11,679 வழக்குகளை விசாரித்து 7,225 வழக்குகளைத் தீர்த்துள்ளன. ஆனால் சண்டிகர், மணிப்பூர், உத்தரகாண்ட், அருணாச்சல பிரதேசம் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் சிறப்பு போக்சோ நீதிமன்றங்கள் இல்லை. இதனால் அங்கு போக்சோ வழக்குகள் இல்லை. இவ்வாறு தெரிவித்தார்.

661 உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்: நாடு முழுவதும் 661 உயர் நீதிமன்ற நீதிபதிகள் கடந்த 2018 முதல் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 21 பேர் எஸ்சி, 12 பேர் எஸ்டி பிரிவினர். 78 பேர் ஓபிசி, 499 பேர் பொதுப்பிரிவினர். உச்ச நீதிமன்றத்தில் 2014 மே மாதம் முதல் 62 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட நீதிபதிகள் எண்ணிக்கை 19,518ல் இருந்து தற்போது 25,523ஆக உயர்த்தப்பட்டுள்ளது. என்று மாநிலங்களவையில் சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மெக்வால் தெரிவித்தார்.

The post போக்சோ வழக்குகளை தீர்த்து வைப்பதில் தமிழ்நாடு சூப்பர்: ஒன்றிய அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Union Govt. ,NEW DELHI ,Union Government ,Rajya Sabha ,Union ,Law Minister ,Arjun Ram Meghwal ,
× RELATED பள்ளி கல்வித்துறைக்கான நிதியை ஒன்றிய...