×

திமுக கூட்டணிக்கு எதிராக காங்கிரஸ் நிர்வாகிகள் கருத்துவிசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய ராகுல்காந்தி உத்தரவு: நடவடிக்கை எடுக்கவும் முடிவு

சென்னை: தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வலுவான கூட்டணி மூலம் 2021 சட்டமன்ற தேர்தல் உள்ளிட்ட பல்வேறு தேர்தல்களில் வெற்றிகளை குவித்து வருகிறது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 39 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தற்போது நடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் 40க்கு 40க்கு என்ற அமோக வெற்றியை பெற்றது.

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியில் முக்கிய நிர்வாகிகள் சிலர், காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையில் கூட்டணி கட்சிகள் குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர். இந்த கருத்துகள் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் மத்தியில் சலசலப்ைப ஏற்படுத்துவதாக இருந்தது. இந்த தகவல் அகில இந்திய காங்கிரஸ் தலைமை வரை சென்றது. முக்கிய நிர்வாகிகளின் இந்த பேச்சுகள் மேலிட தலைவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

அதேபோன்று, சென்னையில் நடந்த செயற்குழு கூட்டத்திலும் மேடையில் பேசிய தலைவர்களின் பேச்சுகளும் கூட்டணிக் கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுவும் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது. தமிழகத்தில் திமுக கூட்டணி வலுவாக உள்ள நிலையில், இதில் சிக்கலை ஏற்படுத்தும் வகையில் சில காங்கிரஸ் நிர்வாகிகள் எதற்காக இப்படி பேசுகிறார்கள் என்ற கேள்வியை அகில இந்திய தலைமை எழுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கான காரணம் குறித்து ஆராயவும் முடிவு செய்துள்ளது. அதேநேரம், இதுபோன்ற விமர்சன பேச்சுகள் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக எழுந்ததா அல்லது தேர்தலுக்கு பின்பு எழுந்ததா, எந்தெந்த நிர்வாகிகள் இதுபோன்ற விமர்சனங்களை எழுப்புகின்றனர் என்றும் மேலிட தலைவர்கள் விவாதித்துள்ளனர். இப்படி அவர்கள் பேசுவதற்கு என்ன காரணம் என்பதை அறிய டெல்லி மேலிடம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் வலுவான கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 9 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

அதேபோன்று 2026 சட்டப் பேரவை தேர்தலையும் கூட்டணியுடன் எதிர்கொள்ள காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ள நிலையில், கூட்டணி குறித்த விமர்சனங்கள், தேர்தலின் போது தேவையில்லாத சிக்கலை ஏற்படுத்தும் என்பதால், அவ்வாறு பேசி வரும் தமிழக காங்கிரசில் உள்ள முக்கிய நிர்வாகிகளின் பட்டியலை எடுக்கவும் டெல்லி தலைமை முடிவு செய்துள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ராகுல்காந்தி உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக அறிக்கையை தாக்கல் செய்யும்படி, தமிழக மேலிட காங்கிரஸ் பொறுப்பாளர் அஜோய் குமாரிடம் மேலிட காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post திமுக கூட்டணிக்கு எதிராக காங்கிரஸ் நிர்வாகிகள் கருத்துவிசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய ராகுல்காந்தி உத்தரவு: நடவடிக்கை எடுக்கவும் முடிவு appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Congress ,DMK ,Chennai ,Tamil Nadu ,Communist ,Liberation Tigers ,Madhyamik ,2021 assembly elections ,DMK alliance ,Dinakaran ,
× RELATED ராகுல் காந்தி கேள்விக்கு முதல்வர்...