×

ரியல் எஸ்டேட் துறையில் நீண்டகால மூலதன ஆதாய வரி குறைத்ததால் அதிக நன்மையே: வருமான வரித்துறை சொல்கிறது

புதுடெல்லி: ஒன்றிய பட்ஜெட்டில் நீண்டகால மூலதன ஆதாய வரி 20 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதே சமயம், இதில் வழங்கப்பட்டு வந்த இண்டெக்சேஷன் சலுகை முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. சொத்துக்களை விற்கும் போது அதில் கிடைக்கும் லாபத்திற்கு விதிக்கப்படும் நீண்டகால மூலதன ஆதாய வரி அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் ரியல் எஸ்டேட் துறை கடுமையாக பாதிக்கப்படும் என்று செய்திகள் வெளியாகின.

ஆனால், வரி செலுத்துவோருக்கு அதிக நன்மையே கிடைக்கும் என வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது. அதன் அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொதுவாக ரியல் எஸ்டேட் முதலீடுகள் மீதான லாபம் ஆண்டுக்கு 12-16 சதவீதம் கிடைக்கும். இது பணவீக்கத்தை விட அதிகம். பணவீக்கமானது குறிப்பிட்ட காலத்தைப் பொறுத்து, 4-5 சதவீதம் என்ற அளவில் உள்ளது. எனவே, இண்டெக்சேஷன் சலுகை நீக்கப்பட்டு, மூலதன ஆதாய வரி குறைக்கப்பட்டதால் பெரும்பாலும் வரி செலுத்துவோர் கணிசமான வரி சேமிப்பை பெற முடியும்.

உதாரணத்திற்கு 5 ஆண்டு ஒரு சொத்தை வைத்திருந்தால் அதன் மதிப்பு 1.7 மடங்கு அல்லது அதற்கு அதிகமாக உயரும். அதுவே, 10 ஆண்டுகள் வைத்திருந்தால் சொத்து மதிப்பு 2.4 மடங்கு அல்லது அதற்கு மேல் அதிகரிக்கும் போது, இந்த புதிய நடைமுறை பயனளிக்கும். 2009-10ல் வாங்கிய சொத்துக்கு தற்போது 4.9 மடங்கு அல்லது அதற்கு மேல் மதிப்பு அதிகரித்திருந்தால் பணவீக்கத்துடன் ஒப்பிட்டு பார்க்கையில் நன்மையே கிடைக்கும்.ஆண்டுக்கு 9-11 சதவீதம் குறைவான மதிப்பு உயர்வு இருந்தால் மட்டுமே முந்தைய வரி விகிதத்தால் நன்மை கிடைக்கும். ஆனால் ரியல் எஸ்டேட்டில் இது நம்பத்தகாதது மற்றும் அரிதானது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post ரியல் எஸ்டேட் துறையில் நீண்டகால மூலதன ஆதாய வரி குறைத்ததால் அதிக நன்மையே: வருமான வரித்துறை சொல்கிறது appeared first on Dinakaran.

Tags : Income Tax ,New Delhi ,Union Budget ,Income Tax Department ,Dinakaran ,
× RELATED வருமான வரி சட்டம் மறு ஆய்வு பணி...