×

சொகுசு கார் அனுப்பாததால் ஆத்திரம் அரசு அதிகாரியை தாக்கிய ஒடிசா ஆளுநரின் மகன்: நடவடிக்கை எடுக்க காங், பிஜூ ஜனதா தளம் வலியுறுத்தல்

புவனேஷ்வர்: ஒடிசா ஆளுநர் ரகுபர்தாஸின் மகன் லலித்குமார். ராஜ்பவனில் உதவி பிரிவு அதிகாரியான பைகுந்தா பிரதான் கடந்த 7ம் தேதி, ஆளுநரின் மகனை அழைத்து வருவதற்காக கார்களை அனுப்பியுள்ளார். ஆனால் அதில் சொகுசு கார் இல்லை என தெரிகின்றது. இதனால் ஆளுநரின் மகன் கோபமடைந்துள்ளார். இந்நிலையில் அன்றிரவு பைகுந்தா ஜனாதிபதி திரவுபதி முர்மூவின் வருகைக்கான ஏற்பாடுகளை கண்காணிக்கும்போது, ஆளுநர் ரகுபர்தாஸின் மகன் லலித்குமார் அங்குள்ள ஊழியர் மூலமாக பைகுந்தாவை தனது அறைக்கு அழைத்துள்ளார்.

பைகுந்தா லலித்குமார் அறைக்கு சென்றபோது சொகுசு கார் அனுப்பாதது குறித்து கேள்வி எழுப்பிய லலித்குமார், அதிகாரியை தரக்குறைவாக பேசி தாக்கியுள்ளார். மேலும் அவரது நண்பர்களும் பைகுந்தாவை தாக்கியுள்ளனர். இது தொடர்பாக ஆளுநரின் முதன்மை செயலாளரிடம் அவர் புகார் கொடுத்துள்ளார். அதில் அவர்கள் தன்னை அறைந்ததாகவும், முகத்தில் குத்தியதாகவும் கூறியிருந்தார். சம்பவம் நடந்து ஒரு வாரம் கடந்த நிலையில் நேற்று முன்தினம் பைகுந்தா இது குறித்து திடீரென தெரிவித்தார்.

மேலும் பைகுந்தாவின் மனைவி போலீசிலும் புகார் அளித்தார். ஆளுநரின் மகன் அரசு அதிகாரியிடம் நடந்து கொண்ட விதத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் அரசு அதிகாரியான பைகுந்தாவுக்கு ஆதரவாக பிஜூ ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. நேற்று ராஜ்பவனுக்கு வெளியே காங்கிரஸ் கட்சியின் இளைஞர் மற்றும் மாணவர் அணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். லலித்குமார் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள்.

The post சொகுசு கார் அனுப்பாததால் ஆத்திரம் அரசு அதிகாரியை தாக்கிய ஒடிசா ஆளுநரின் மகன்: நடவடிக்கை எடுக்க காங், பிஜூ ஜனதா தளம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Odisha ,governor ,Congress ,Biju Janata Dal ,Bhubaneswar ,Lalit Kumar ,Raghubardas ,Bhaikunta Pradhan ,Raj Bhavan ,Dinakaran ,
× RELATED சட்டசபை மோதலுக்கு மத்தியில்...