×

தொடர்ந்து விமர்சித்து வந்தால் 2026 தேர்தலில் அதிமுகவால் போட்டியிடவே முடியாது: பாஜ செய்தி தொடர்பாளர் அறிக்கை

சென்னை: பாஜ குறித்து அதிமுக தலைவர்கள் தொடர்ந்து விமர்சித்து வந்தால், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக போட்டியிட முடியாத சூழ்நிலை ஏற்படும் என பாஜ செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். தமிழக பாஜ மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடந்த 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டப்பேரவைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என தொடர் தோல்விகளை அதிமுக சந்தித்து வருகிறது. நடந்து முடிந்த 2024 மக்களவைத் தேர்தலில் வரலாற்றில் இதுவரை சந்திக்காத படுதோல்வியை அதிமுக சந்தித்துள்ளது. தென் சென்னை, வேலூர், தேனி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 7 தொகுதிகளில் அதிமுக டெபாசிட் இழந்துள்ளது. இந்த தோல்விக்கு எடப்பாடி பழனிசாமியின் தலைமை தான் காரணம் என்பதை அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உணர தொடங்கியுள்ளனர். இதனால் எந்த நேரத்திலும் அதிமுக தலைமைக்கு சிக்கல் வரலாம் என்ற நிலையில் எடப்பாடி பழனிசாமி நிலைகுலைந்து போய் உள்ளார்.

மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுகவை பின்னுக்குத்தள்ளி பாஜ 2ம் இடத்தைப் பிடித்துள்ளது. அந்த அதிர்ச்சியில் இருந்து மதுரையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீளவில்லை. அதனால் பாஜ மீதும், தலைவர் அண்ணாமலை மீதும் அவதூறுகளை பரப்பி வருகிறார். எடப்பாடி பழனிசாமி, உதயகுமார், ஜெயக்குமார், சி.வி சண்முகம், கே.பி.முனிசாமி போன்ற வாய் சவடால் வீரர்கள் அதிமுகவை அழிவுப்பாதையில் கொண்டு செல்வதை தடுத்து, மீட்க வேண்டும் என்பதுதான் பெரும்பான்மையான அதிமுக தொண்டர்களின் கருத்து. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் படுதோல்வி அடைய நேரிடும் என்ற பயத்தால் அதிமுக போட்டியிடவில்லை. அதிமுக தலைவர்கள் தொடர்ந்து இதேபோன்று பாஜ குறித்தும், தலைவர் அண்ணாமலை குறித்தும் அவதூறு பேசி வந்தால், 2026 சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக போட்டியிட முடியாத சூழ்நிலை ஏற்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தொடர்ந்து விமர்சித்து வந்தால் 2026 தேர்தலில் அதிமுகவால் போட்டியிடவே முடியாது: பாஜ செய்தி தொடர்பாளர் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : AIADMK ,2026 elections ,BJP ,CHENNAI ,2026 assembly elections ,Tamil Nadu ,ANS Prasad ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…