×

சென்னை மாணவிகளை பாலியலில் ஈடுபடுத்திய விவகாரம்: தி.நகர் குடியிருப்பு மேலாளர் போக்சோவில் கைது: போலீசார் அதிரடி நடவடிக்கை

சென்னை: பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில், சிறுமிகள் என்று தெரிந்தும் பாலியலில் ஈடுபட்ட 3வது நபரான தி.நகரில் சர்வீஸ் அடுக்குமாடி குடியிருப்பு மேலாளர் ஒருவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி கருக்கா வினோத்தை பல முறை ஜாமீனில் எடுத்ததாக என்ஐஏ அதிகாரிகள் கடந்த மாதம் தி.நகர் டாக்டர் தாமஸ் சாலையை சேர்ந்த நதியா (37) என்பவர் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் நதியாவிடம் கைப்பற்றப்பட்ட 5 செல்போன்களில் 17 பள்ளி மாணவிகளின் 170க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்தத தெரியவந்தது. இதுகுறித்து என்ஐஏ அதிகாரிகள் அளித்த தகவலன் படி சென்னை போலீஸ் விசாரணை நடத்தினர்.

அதில் நதியா என்பவர் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் தனது மகள் மூலம் அவருடன் படிக்கும் ஏழ்மையான சக மாணவிகளை வீட்டிற்கு அழைத்து வந்து, அவர்களுக்கு பணத்தாசை மற்றும் பரிசு பொருட்கள் வழங்கி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது விசாரணையில் உறுதியானது. அதைதொடர்ந்து உதவி கமிஷனர் ராஜலட்சுமி தலைமையிலான இன்ஸ்பெக்டர் செல்வராணி குழுவினர் அதிரடியாக கடந்த 18ம் தேதி பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய புரோக்கர் நதியா, அவரது சகோதரி சுமதி (43), சுமதியின் இரண்டாவது கணவர் ராமச்சந்திரன், மற்றும் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்த கோவையை சேர்ந்த அசோக்குமார், சைதாப்பேட்டையை சேர்ந்த 70 வயது முதியவர் உட்பட 9 பேரை கைது செய்தனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் விபசார தடுப்பு பிரிவு போலீசார் கடந்த ஒரு வாரமாக நடத்தி வரும் ரகசிய விசாரணையின்படி, பல முறை பள்ளி மாணவிகளை தி.நகரில் சர்வீஸ் அடுக்குமாடி குடியிருப்பு நடத்தி வரும் மேலாளர் ஒருவர் பயன்படுத்தி வந்துள்ளார். நதியா அனுப்பும் பள்ளி மாணவிகளை அவர்கள் விருப்பத்திற்கு மாறாக பாலியல் தொடர்பு வைத்திருந்த மேலாளரை விபசார தடுப்பு பிரிவு போலீசார் நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்தனர். மேலும், பாதிக்கப்பட்ட மாணவிகளின் வாக்குமூலத்தின்படி, பள்ளி மாணவிகளை பாலியலுக்கு பயன்படுத்தி கொண்ட நபர்கள் பட்டியலை விபசார தடுப்பு பிரிவு போலீசார் எடுத்தும், மாணவிகளுடன் இருந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா ஆதாரங்களை வைத்து கைது செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் நதியா பள்ளி மாணவி ஒருவரை ஐதராபாத் அழைத்து சென்றுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட மாணவியின் வாக்கு மூலத்தின்படி ஐதராபாத் ஓட்டலில் உல்லாசமாக இருந்து நபரை பிடிக்க தனிப்படை ஒன்று விரைவில் ஐதராபாத் செல்ல உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிகள் அளித்த தகவலின்படி 3வது நபரை போலீசார் நேற்று போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு பக்கம் விபசார தடுப்பு பிரிவு மற்றொரு புறம் குழந்தைகள் நல அமைப்புகள் என தனித்தனியாக விசாரணை நடத்தி பள்ளி மாணவிகளை சீரழித்த நபர்களை பட்டியலிட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

The post சென்னை மாணவிகளை பாலியலில் ஈடுபடுத்திய விவகாரம்: தி.நகர் குடியிருப்பு மேலாளர் போக்சோவில் கைது: போலீசார் அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,T. Nagar ,Bocso ,Governor ,Guindy, Chennai ,Pocso ,Dinakaran ,
× RELATED மாணவிகளை பாலியல் தொழிலில் தள்ளிய...