×

கட்டிட வேலைக்கு வந்த பெண்ணுக்கு கத்திக்குத்து

சேலம், டிச.21: சேலத்தில் இளம்பெண்ணை கத்தியால் குத்திய வழக்கில் தேடப்பட்டவர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (32). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கரூர் மாவட்டம் பெரியகோலூர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (45). இவர் சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டியில் நடந்து வரும் கட்டுமான பணிக்காக ராஜேஸ்வரியை அழைத்து வந்தார். பின்னர் இருவரும் அங்கு கட்டிட பணியில் ஈடுபட்டிருந்தனர். பழனிசாமிக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது.இந்தநிலையில் நேற்றுமுன்தினம் கட்டுமான பணியில் இருக்கும் சூப்பர்வைசரிடம் பழனிசாமி திடீரென தகராறில் ஈடுபட்டார். இதனால் அவர் பழனிசாமியை வேலைக்கு வரவேண்டாம் என கூறிவிட்டார். இதையடுத்து அங்கு பணியில் இருந்த ராஜேஸ்வரியை அழைத்த பழனிசாமி, தன்னுடன் வரவேண்டும் என அழைத்துள்ளார்.

ஆனால், எனக்கு கடன் அதிகமாக உள்ளது. இதனால் வரமாட்டேன் என அவர் மறுத்துள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, பழனிசாமி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராஜேஸ்வரியை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். பின்னர் படுகாயமடைந்த ராஜேஸ்வரியை அங்கிருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுபற்றி ராஜேஸ்வரி அளித்த புகாரின் பேரில் கன்னங்குறிச்சி போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதனிடையே, காயங்களுடன் பழனிசாமி நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். இதுபற்றி நாமக்கல் போலீசார் விசாரித்தபோது, ராஜேஸ்வரி தான் முதலில் என்னை கத்தியால் குத்தினார். அதன்பிறகு தான் நான் கத்தியை பறித்து அவரை குத்தினேன் என தெரிவித்தார். இதன் பேரிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கட்டிட வேலைக்கு வந்த பெண்ணுக்கு கத்திக்குத்து appeared first on Dinakaran.

Tags : Salem ,Namakkal Government Hospital ,Vedasandur ,Dindigul district ,Dinakaran ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...