- பொதுவுடைமைக்கட்சி
- இந்திய மாநிலக் குழு
- கோயம்புத்தூர்
- சென்னை
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு
- தின மலர்
சென்னை: கோயம்புத்தூரில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு கூட்டத்தில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் மாநிலக்குழு கூட்டம் கோயம்புத்தூரில், நவம்பர் 30, டிசம்பர் 1 – 2023 ஆகிய தேதிகளில் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி. சம்பத், உ. வாசுகி, பெ.சண்முகம் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு,
தீர்மானம் – 1
மேற்கு மாவட்டங்களில் தொழில்கள் தொடர் பாதிப்புநிலைமையை சீராக்க சிறப்பு கவனம் செலுத்திடுக!
ஒன்றிய, மாநில அரசுகளுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல் தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களான கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்டவைகளில் கணிசமான சிறு / குறுந்தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ளன. குறிப்பாக, துணி உற்பத்தி மற்றும் ஆயத்த ஆடை சார்ந்த தொழில்களும், வார்ப்பட தொழில்களும் அதிக எண்ணிக்கையில் உள்ளன. ஒன்றிய அரசின் மோசமான கொள்கைகளால் இந்தப் பகுதி கடுமையான நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் இப்பகுதிக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
உள்நாட்டு நூல் உற்பத்தியாளர்களை பாதிக்கும் விதத்தில் குறிப்பாக, பஞ்சு ஏற்றுமதியின்போது உள்நாட்டு தேவையை கணக்கில் கொள்ளாமல் பெரும் கார்ப்ரேட் முதலாளிகளின் லாபத்தை மட்டுமே முதன்மையாக கொள்ளும் பன்னாட்டு நூல் இறக்குமதிக்கு கொடுத்துள்ள அனுமதியை விலக்கிக் கொள்ள வேண்டும். கழிவுப் பஞ்சை மதிப்புக்கூட்டி ஏற்றுமதி செய்திட வழிவகுக்க வேண்டும். மேலும், ஏற்றுமதி தொழில்கள் மந்தமாகியிருப்பதால் டிராபேக் சதவீதத்தை உயர்த்திட வேண்டும். இப்பகுதியில் செயல்படும் தொழில்களுக்கு வங்கிக் கடன்களில் நிவாரண திட்டம் அறிவிக்க வேண்டும் என ஒன்றிய பாஜக அரசை மாநிலக்குழு வலியுறுத்துகிறது.
ஒன்றிய ஆட்சியின் போக்கிற்கு மாற்றாக ‘தமிழ்நாடு பருத்தி கழகம்’ உருவாக்குவோம் என்ற முக்கியமான அறிவிப்பை தமிழ்நாடு அரசாங்கம் மேற்கொண்டது. அதனை உடனடியாக அமலுக்கு கொண்டு வந்து நிவாரணமளிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். ஒன்றிய அரசின் நிர்பந்தம் காரணமாக தமிழ்நாட்டில் சிறு / குறு தொழில்களுக்கு மின் கட்டணத்தில் செய்துள்ள மாற்றங்கள் கடும் பாதிப்பை உருவாக்கியுள்ளன.
தமிழ்நாடு முழுவதும் எழுந்த விமர்சனங்களை தொடர்ந்து இந்த சுமை ஓரளவு குறைக்கப்பட்டிருந்தாலும், சிறு / குறு தொழில் நிறுவனங்களுக்கு நிலை கட்டணம், பீக் ஹவர் கட்டண உயர்வை ரத்து செய்திடுவதும், மேலும் சிறு குறு தொழில்களை பாதுகாக்கும் வகையில் முற்றாக நிவாரணம் அளிப்பதுடன் சூரிய மின்சாரம் உள்ளிட்ட மாற்று முறைகளை கையாள அரசு மானியம் மற்றும் கடன் உதவிகள் வழங்கிட வேண்டுமெனவும் மாநில அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கோருகிறது.
தீர்மானம் – 2:
ஈரோடு மாவட்டத்தில் பட்டியலின அருந்ததிய இளைஞர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை கைது செய்க! ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தாலுக்கா பொலவக்காளிபாளையம், இந்திரா நகரை சேர்ந்த பட்டியலின அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் நவீன்குமார், கிருபாகரன் மீது 21.11.2023 அன்று சாதி ஆதிக்க மனப்பான்மையுடன் கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த வன்கொடுமை செயலை செய்த 20 நபர்கள் மீது 24.11.2023 அன்று வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டும், இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை.
சாதி ஆதிக்க சக்திகள் இச்சம்பவத்தை திசைதிருப்பும் வகையிலும் தாங்கள் செய்த குற்றச் செயலை மறைத்திட கொலைவெறி தாக்குதலுக்குள்ளான இரண்டு இளைஞர்கள் மீது திருட்டு குற்றம் சாட்டி, காவல்துறையும் பாதிக்கப்பட்ட இரு இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது வன்மையாக கண்டனத்திற்குரியது. தாக்குதலில் ஈடுபட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள வன்கொடுமை குற்றவாளிகள் 20 பேர் மீதான வழக்கினை ரத்து செய்திட வேண்டும் என சாதீயரீதியாக அணிதிரண்டு மறியல் நடத்திய சம்பவம் அரசுக்கு நிர்பந்தம் கொடுக்கும் தந்திரமேயாகும்.
சாதி ஆதிக்க மனப்பான்மையுடன் கொலைவெறி செயலில் ஈடுபட்டு வழக்கு பதிவு செய்துள்ள அனைவரும் உடனடியாக கைது செய்யப்பட்டு கடுமையான தண்டனை பெற்று தர வேண்டும் என்று மாநிலக்குழு வற்புறுத்துகிறது. தமிழ்நாடு அரசு, பட்டியலின மக்கள் மீதான வன்கொடுமைகளை தடுக்கும் வகையில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், காயம் அடைந்த இளைஞர்களுக்கு மருத்துவ உதவிகளும், உரிய இழப்பீடும் வழங்கிட தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
The post கோயம்புத்தூரில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு கூட்டம்: 2 தீர்மானங்கள் நிறைவேற்றம் appeared first on Dinakaran.
