×

இலங்கை சிறையில் இருந்து விடுவிப்பு 12 தமிழக மீனவர்கள் சென்னை திரும்பினர்: அரசு சார்பில் வரவேற்பு

சென்னை: இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்களில், 3வது கட்டமாக 12 மீனவர்கள் இலங்கையிலிருந்து நேற்று காலை சென்னை வந்தனர். தமிழ்நாட்டில் ராமேஸ்வரம், மண்டபம் கடல் பகுதிகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த, 64 தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படை கடந்த அக்டோபர் மாதத்தில் கைது செய்தது. இதையடுத்து, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அரசு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கை நீதிமன்றம் 63 மீனவர்களை விடுதலை செய்தது,

இந்நிலையில் விடுதலை செய்யப்பட்ட 63 தமிழக மீனவர்களில், 15 பேர் கடந்த 21ம் தேதி விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து நேற்று முன்தினம் 15 பேர் விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இலங்கையில் இந்திய தூதரகம் பராமரிப்பில் இருந்த தமிழக மீனவர்கள் மேலும் 12 பேர் நேற்று காலை ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் இலங்கையிலிருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அவர்களை சென்னை விமான நிலையத்தில், தமிழ்நாடு அரசு சார்பில், தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். பிறகு தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்களில் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இலங்கையில் இந்திய தூதரக பராமரிப்பில் இருக்கும் மேலும் 21 தமிழக மீனவர்கள், அடுத்த ஓரிரு தினங்களில் சென்னை அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post இலங்கை சிறையில் இருந்து விடுவிப்பு 12 தமிழக மீனவர்கள் சென்னை திரும்பினர்: அரசு சார்பில் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Sri Lanka ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...