பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மன்னார்க்காட்டை அடுத்த எடத்தநாட்டுக்கரை உப்புக்குளம் வெள்ளாட்டு மலையடிவாரத்தில் பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது. இதை பார்த்த அப்பகுதி தோட்ட தொழிலாளர்கள் மன்னார்க்காடு வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். திருவிழாம்குன்று வனத்துறை அதிகாரி சுனில்குமார் தலைமையில் வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர் டேவிட் இப்ரஹாம் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இதில் காட்டு யானையின் முதுகு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் புழுக்கள் அரித்த நிலையில் இறந்தது தெரியவந்தது. இறந்து கிடந்த பெண் யானைக்கு சுமார் 5 வயது இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அதன் உடல்பாகங்கள் ஆய்வுக்காக காக்கநாடு ஆய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உடற்கூறாய்வுக்கு பின்னர் யானையின் உடல் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது.
The post பாலக்காடு அருகே வனத்தில் இறந்து கிடந்த பெண் யானை appeared first on Dinakaran.
