×

ஊத்துக்கோட்டை அருகே பரபரப்பு வீட்டுமனை பட்டா வழங்கியதற்கு எதிர்ப்பு: அதிகாரிகள் சமரசம்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே, லட்சிவாக்கம் ஊராட்சி காலனி மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதே ஊராட்சியை சேர்ந்த பெரம்பூர் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஊத்துக்கோட்டை அருகே லட்சிவாக்கம் ஊராட்சி காலனி பகுதியில் 180க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் வீட்டுமனை பட்டா கேட்டு கடந்த 2008ம் ஆண்டு திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்திலும், ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்திலும் மனு கொடுத்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த லட்சிவாக்கம் காலனி பகுதி மக்கள், கடந்த நவம்பர் மாதம் லட்சிவாக்கம் செங்காளம்மன் கோயில் அருகில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் வருவாய்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பட்டா கொடுக்கும் வரை போராட்டம் தொடரும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கும்மிடிபூண்டி தொகுதி செயலாளர் ஜீவா தலைமையில் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுட்டனர். பின்னர், 2 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு கலெக்டர், எம்எல்ஏ ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு அருகில் உள்ள பெரம்பூர் கிராமத்தில் 43 பேருக்கு பட்டா வழங்கினர். இதனையடுத்து பட்டா வழங்கி 4 மாதங்கள் ஆகியும் இடத்தை அளவீடு செய்யவில்லை. இதனால் பட்டா வழங்கியவர்களுக்கு இடத்தை அளவீடு செய்து தரவேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலெக்டர் ஆல்பீ ஜான் வர்கீஸ் உத்தரவின் பேரில், மண்டல துணை வட்டாட்சியர் டில்லிராணி, வருவாய் ஆய்வாளர் விஜயலட்சுமி ஆகியோர், போலீஸ் பாதுகாப்புடன் பெரம்பூர் பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒதுக்கீடு செய்த இடத்தை அளவீடு செய்து பட்டாதாரர்களிடம் ஒப்படைத்தனர். இதற்கு பெரம்பூர் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் இடம் ஒதுக்கியும் வீடு கட்ட முடியவில்லையே என ஆத்திரமடைந்த லட்சிவாக்கம் காலனி மக்கள் நேற்று ஒதுக்கீடு செய்த இடத்தில் கொட்டகை அமைத்தனர். இதையறிந்த தாசில்தார் வசந்தி மற்றும் டிஎஸ்பி கணேஷ்குமார், இன்ஸ்பெக்டர்கள் ஏழுமலை, வெங்கடேசன் மற்றும் போலீசார் கொட்டகை போடுவதை நிறுத்தினர்.

இதனால் ஆத்திரமடைந்த லட்சிவாக்கம் காலனி மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் நீலமேகம், மாநில அரசிலமைப்புக்குழு தலைவர் நீலவானத்து நிலவன் ஆகியோரிடம் ஏடிஎஸ்பி அரிகுமார் தலைமையில், டிஎஸ்பி கணேஷ் குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் 3 நாட்கள் அவகாசம் கொடுங்கள் என்று போலீசார் கூறிய பிறகு அனைவரும் கலைந்து சென்றனர். அப்போது பெரம்பூர் மக்கள் அங்கு வந்து அவர்களுக்கு இடம் கொடுக்ககூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடமும் போலீசார் பேசி சமரசம் ஏற்படுத்தினர். இந்த சம்பவத்தால் அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

The post ஊத்துக்கோட்டை அருகே பரபரப்பு வீட்டுமனை பட்டா வழங்கியதற்கு எதிர்ப்பு: அதிகாரிகள் சமரசம் appeared first on Dinakaran.

Tags : Oothukottai ,Lakshwakkam Panchayat Colony ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...