*பாண்டியர் காலத்தை சேர்ந்தவை
திருவில்லிபுத்தூர் : திருவில்லிபுத்தூர் அருகே, 750 ஆண்டு பழமையான பாண்டியர் காலத்தை சேர்ந்த துலாக்கல் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் ராஜகுரு மற்றும் நூர்சாகிபுரம் சிவக்குமார் ஆகியோர், திருவில்லிபுத்தூர் அருகே, பாட்டக்குளம் சல்லிப்பட்டியில் உள்ள ஸ்ரீபாலாண்டி அய்யனார் கோயில் முன்பு, ஒரு துலாக்கல்லில் கல்வெட்டு இருப்பதை கள ஆய்வின்போது கண்டறிந்தனர். அவற்றை படியெடுத்து படித்து ஆய்வு செய்தனர். இதுகுறித்து ராஜகுரு, நூர்சாகிபுரம் சிவக்குமார் ஆகியோர் கூறியதாவது: பாட்டக்குளம் சல்லிப்பட்டி ஸ்ரீபாலாண்டி அய்யனார் கோயில் முன்பு 7 அடி உயரம். 1.5 அடி அகலத்தில் செவ்வக வடிவில் ஒரு கல்தூண் உள்ளது. இதன் மேற்பகுதி குறுகலாக அமைந்துள்ளது.
இதன் கீழ்ப்பகுதியில் 5 வரியில் அமைந்த ஒரு கல்வெட்டு உள்ளது. இதில் ‘ஸ்வஸ்தி இத்தன்மம் அரியான் சோறனான விசைய கங்கர் செய்தது உ’ என எழுதப்பட்டுள்ளது. இக்கோயில் கண்மாய்க் கரையில் அமைந்துள்ளது. இது கிணற்றில் இருந்து நீர் இறைக்கப் பயன்படும் துலாக்கல் ஆகும். அரியான் சோறனான விசைய கங்கர் என்பவர் கிணற்றையும், துலாக்கல்லையும் அமைத்துக் கொடுத்துள்ளார். பாண்டியர் காலத்தில் இவர் இப்பகுதி ஆட்சியாளராக இருந்திருக்கலாம். இங்கு துலாக்கல் மட்டுமே உள்ளது. கிணறு மூடப்பட்டிருக்கலாம்.
இவ்வூருக்கு அருகில் உள்ள விழுப்பனூரிலும் ஒரு துலாக்கல் உள்ளது. இதில் உள்ள சுந்தரபாண்டியன் கல்வெட்டில், மலைமண்டலத்தைச் சேர்ந்த ஒருவன் கிணறு, துலாக்கல், படிக்கட்டு, தொட்டி அமைத்ததாக தகவல் உள்ளது. மேலும், விருதுநகரில் இருந்து ஆமத்தூர், மங்கலம் வழியாக திருவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் வெள்ளூர், விழுப்பனூர், மானகச்சேரி, மாறனேரி, அர்ச்சுனாபுரம் ஆகிய ஊர்களில் பாண்டியர் காலத்தில் (கி.பி.13-ம் நூற்றாண்டு இறுதி) இது போன்ற கிணறுகள் வெட்டப்பட்டுள்ளன. அப்போது இப்பகுதிகளில் தண்ணீர்ப் பஞ்சம் இருந்ததை அறியமுடிகிறது. கல்வெட்டு எழுத்தமைதியைக் கொண்டு இது பிற்காலப் பாண்டியர்களின் கி.பி.13-14-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கருதலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
துலா அல்லது ஏற்றம்
கிணற்றில் இருந்து நீர் இறைக்கப் பயன்படும் ஒருவகை நெம்புகோல் அமைப்பு துலா அல்லது ஏற்றமாகும். மக்கள் பயன்பாட்டுக்குத் தேவையான மழைநீர் கிடைக்காமல் கண்மாய், குளங்கள் வறண்டு போகும்போது, கிணறுகளை தோண்டி பயன்படுத்தப்படுவது வழக்கம். இத்தகைய கிணறுகளை அப்பகுதி ஆட்சியாளர்கள், வணிகர்கள் அமைத்துத் கொடுத்துள்ளனர். இது பாண்டியர் காலம் முதல் வழக்கத்தில் இருந்துள்ளது. கோயில் அருகில் வெட்டப்பட்டுள்ளவை திருமஞ்சனக் கிணறுகள் என்றும், வழிப்பாதைகளில் உள்ளவை பொது குடிநீர்க் கிணறுகள் என்றும் அறிய முடிகிறது.
The post திருவில்லிபுத்தூர் அருகே 750 ஆண்டு பழமையான துலாக்கல் கல்வெட்டு கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.
