×

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தடையில்லா, சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவு

சென்னை: சென்னை, அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள மின் துறை சார்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சீரான மின் விநியோகம் வழங்குவது குறித்து காணொலி காட்சி வாயிலாக அனைத்து மண்டல தலைமைப்பொறியாளர்கள், அனைத்து மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர்களுடன் நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, இணை மேலாண்மை இயக்குநர் (நிதி) விஷு மஹாஜன் மற்றும் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். சிறப்பு ஆய்வுக்கூட்டத்தில், மின் பகிர்மான வட்டங்களில் அரைமணி நேரத்திற்கு மேல் மின் தடங்கல் ஏற்பட்ட நிகழ்வுகள் குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு கேட்டறிந்து மின்தடங்கல் ஏற்படும் இடங்களில் சிறப்பு கவனம் செலுத்தி அதற்கான காரணத்தை கண்டறிந்து உடனடியாக சரிசெய்வதற்கும், அனைத்து அலுவலர்களுக்கும் உத்தரவிட்டார்.

மேலும், மின்னகம் மூலம் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறும், பொதுமக்கள் அனைவருக்கும் தடையில்லா, சீரான மின்சாரம் தொடர்ந்து கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார். வடகிழக்கு பருவமழையையொட்டி, மின்சார சீரமைப்பு பணிகளில் ஈடுபடும் பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் தகுந்த முன்னெச்சரிக்கையுடனும், உரிய பாதுகாப்புடனும் செயல்படுமாறும்,

பணியாளர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு உபகரணங்களையும் அளித்து பாதுகாப்பான முறையில் மின்கட்டமைப்பை சீர்செய்யும் பணியில் ஈடுபடுமாறும், மின்சார சீரமைப்பு பணிகளுக்கு தேவையான பொக்லைன் வாகனங்களை முன்கூட்டியே தயார் நிலையில் வைத்துக் கொள்ளுமாறும், அனைத்து வாரிய வாகனங்களையும் தயார் நிலையில் வைத்துக்கொள்ளுமாறும், தேவைப்படின் அருகாமையில் உள்ள மின்பகிர்மான வட்டங்களிலிருந்து பணியாட்களை பணிகளில் ஈடுபடுத்துமாறும் அதிகாரிகளிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு கேட்டுக்கொண்டார்.

அதேபோல, பருவ மழைக்காலங்களின் போது மாவட்ட நிர்வாகத்தினருடன் எப்போதும் தொடர்பில் இருக்குமாறும் அனைத்து அலுவலர்களுக்கும் உத்தரவிட்டார். அனைத்து மேற்பார்வை பொறியாளர்களும் தமது அலுவலகங்களில் இதற்கென தனியாக குழு அமைத்து கன மழையின் போது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், சேதாரங்கள் குறித்தும் ஆய்வு செய்து உடனடியாக அனைவருக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும், மின் கட்டமைப்பில் ஏற்படும் சேதாரங்களை பொறுத்து சம்பந்தப்பட்ட மேற்பார்வை பொறியாளர்கள் தேவைப்படும் பணியாளர்கள் மற்றும் தளவாடப்பொருட்களுடன் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இருக்குமாறும்,

குறிப்பாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உடனுக்குடன் கள ஆய்வு செய்து மின் விநியோகத்தை உடனடியாக சீர் செய்யுமாறும் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளிடத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவிட்டார். அதேபோல, பருவ மழை காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால் முன்னுரிமை அடிப்படையில், மாவட்டங்களில் உள்ள அனைத்து மருத்துவமனைகள் மற்றும் குடிநீர் இணைப்புகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என அனைத்து அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தடையில்லா, சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Minister ,Thangam ,South Government ,Chennai ,Tamil Nadu Power Board ,Anna Road, Chennai ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...