×

திருவாரூர் மாவட்டத்தில் ரூ.32 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்பு

சென்னை: தமிழ்நாடு இந்து சமயஅறநிலையத்துறை வெளியிட்ட அறிக்கை: இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களுக்குச்சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி நேற்று திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி, பிறவி மருந்தீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான நகரப்பகுதியில் அமைந்துள்ள 2 ஏக்கர் 72 சென்ட் நிலம் தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பில் இருந்தது. அதேபோல மன்னார்குடி வட்டம், கோட்டூர், கொழுந்தீஸ்வரசுவாமி கோயிலுக்குச் சொந்தமான 6 ஏக்கர் 89 சென்ட் பரப்பிலான புன்செய் நிலங்கள் 20 நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.

இந்த 2 ஆக்கிரமிப்புகளையும் அகற்றிட நாகப்பட்டினம் மண்டல இணை ஆணையர் வி.குமரேசன் தலைமையில், திருவாரூர், உதவி ஆணையர் (பொறுப்பு) ப.ராணி முன்னிலையில் காவல்துறை மற்றும் வருவாய்துறை அலுவலர்களின் உதவியுடன் நடவடிக்கை மேற்கொண்டு நிலங்கள் மீட்கப்பட்டு கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது. அந்நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு எல்லை கற்கள் நட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட சொத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.32 கோடியாகும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

The post திருவாரூர் மாவட்டத்தில் ரூ.32 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvarur district ,Chennai ,Tamil Nadu ,Hindu Religious Institute ,Temple Llands ,Dinakaran ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...